அரசு பஸ் ஓட்டினால்தான் மணல் அள்ள டோக்கன்… இல்லை என்றால்.. லாரி டிரைவர்களை மிரட்டும் ஆர்டிஓ
அரசு பேருந்துகளை ஓட்டினால்தான் மணல் அள்ள டோக்கன் அளிக்கப்படும் என்று மணல் லாரி டிரைவர்களை ஆர்டிஓ மிரட்டி வருவதாக டிரைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருச்சி: அரசு பேருந்துகளை இயக்கினால்தான் மணல் அள்ள டோக்கன் அளிக்கப்படும் என்று மணல் லாரி ஓட்டுநர்களை ஆர்டிஓ மிரட்டுவதாக டிரைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நேற்று தமிழகமெங்கும் பேருந்து சேவை பெருமளவு பாதிக்கப்பட்டது. அரசு பஸ்கள் இயங்காததால் அலுவலகங்களுக்குச் செல்பவர்களும், கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.
2வது நாள் வேலைநிறுத்தம்
இந்நிலையில், பயிற்சி பெற்ற உரிமம் வைத்துள்ள ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று 100 சதவீதம் பேருந்து இயக்கப்படும் என்று நேற்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.
மிரட்டல்
இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி மாவட்டம் கொண்டையம்பேட்டையில் மணல் லாரி ஓட்டுநர்கள், அரசு பேருந்துகளை ஓட்ட வேண்டும் என்று மிரட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து லாரி உரிமையாளர் சங்க தலைவர் தர்மசாஸ்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டோக்கன் கிடையாது
தமிழகத்தில் நடைபெற்று வரும் போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தப் போராட்டத்தையடுத்து, ஆர்டிஓ எங்களிடம் வந்து, பஸ் ஓட்ட வந்தால் மட்டும்தான் மணல் லோடு கிடைக்கும் என்று மிரட்டுகிறார். இதற்கு ஒப்புக் கொள்ளாதவர்களுக்கு லோடு கிடையாது என்று சொல்கிறார்.
யார் பொறுப்பு
லாரி ஓட்டுபவர்கள் பஸ் ஓட்டுவது என்பது ஒரு சாத்தியமான நடைமுறை இல்லை. திடீரென பேருந்து ஓட்டுவதால் அவருக்கு ஏதோ ஒன்று நடந்தால் அதற்கு யார் பொறுப்பு? ஒரு ட்ரிப் ஓட்டினால் 255 ரூபாய் பணம் தருவதாக சொல்கிறார்கள். என்றாலும் எங்களுக்கு பஸ் ஓட்ட தெரியாது என்பதுதான் உண்மை.
பாதுகாப்பில்லை
நாங்கள் பேருந்தை ஓட்டினால் மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. இதை எல்லாம் கூறி நாங்கள் பேருந்து ஓட்ட மறுத்தால், "லாரிக்கு எப்.சி. எப்படி எடுப்பீர்கள் என்றும் லாரிகளை பதிவு செய்ய எங்களிடம் தானே வர வேண்டும் என்றும் ஆர்டிஓ மிரட்டுகிறார் என்று தர்மசாஸ்தா கூறினார்.