நெல்லையில் சர்ச் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பரிதாப சாவு! 13 பேர் படுகாயம்
நெல்லை: பாளையங்கோட்டையில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் தேவாலயத்தின் மேற்கூரை புதன்கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்ததில், கட்டடத் தொழிலாளர்கள் 3பேர் இறந்தனர்; பலத்த காயமடைந்த 13 பேர் மீட்கப்பட்டனர்.
நெல்லை, பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ளது சேவியர் காலனி. இங்குள்ள சி.எஸ்.ஐ. சர்ச் தெருவில் தூய பேதுரு ஆலயம் உள்ளது. இங்கு முதல் தளத்தில் 60 அடி உயரத்தில் மேற்கூரையை கோபுர வடிவில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 60 அடி அகலம், 100 அடி நீளத்தில் கம்பிகள் கட்டப்பட்டு, புதன்கிழமை கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது.

சேவியர் காலனியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜோஸ் என்பவர் ஏற்பாட்டில் நடைபெறும் இப் பணியில் நாகர்கோவில், ஆலங்குளம், சுரண்டை பகுதிகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். பணி முடிந்த நிலையில் இரவு 8 மணியளவில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மேல்பகுதியிலும், கீழ்தளத்திலும் கான்கிரீட் தளத்துக்காக நிறுத்தப்பட்டுள்ள தூண்களைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சப்தத்துடன் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்தது.
கான்கிரீட் தளத்தில் நின்றிருந்த தொழிலாளர்கள், உடனடியாக வெளியேற முயன்றனர். எனினும், அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். பாளையங்கோட்டை தீயணைப்புப் படையினர், போலீஸார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மின்சாரம் இல்லாததால் மீட்புப் பணி தாமதமானது. இதையடுத்து, ஜெனரேட்டர் மூலம் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இடிபாடுகளுக்குள் சிக்கிய நாகர்கோவில் அருகே உள்ள ராஜாவூரைச் சேர்ந்த எடிசன் (36), ஜஸ்டின் (50), மற்றொரு ஜஸ்டின் (40) ஆகிய 3 பேர் இறந்தனர்.

பலத்த காயமடைந்த தொழிலாளர்கள் ஆலங்குளம் அருகே உடையாம்புளியைச் சேர்ந்த முருகன் (27), முத்துக்குமார் (22) உள்ளிட்ட 13 பேர் மீட்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆட்சியர் கருணாகரன் வந்து மீட்புப் பணியை தீவிரப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை பெறுவோரைப் பார்த்தார்.
இதுகுறித்து கோட்டாட்சியர் பெர்மி வித்யா கூறியதாவது: இந்த கட்டுமானம் சாதாரணக் கட்டடம் போன்றது அல்ல. சுமார் 60 அடி உயரத்தில் மேற்கொள்ளப்பட்ட பணி. முறையான திட்டமிடாமல், தேவையான நிறுத்தம் கொடுக்காத நிலையில் அதிக எடையில் கான்கிரீட் தளம் அமைத்ததால் இடிந்து விழுந்திருப்பதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications