3 லாரிகள் மோதிக்கொண்டதில் 3 பேர் பலி.. விராலிமலை அருகே கோர விபத்து.. ஒருவர் படுகாயம்
மூன்று லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
Recommended Video
புதுக்கோட்டை: விராலிமலை அருகே மூன்று லாரிகள் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தருமபுரியில் இருந்து செங்கல் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று கீரனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, காரைக்குடியில் இருந்து அரிசி ஏற்றிகொண்டு, லாரி ஒன்றும் எதிர் புறத்தில் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
அந்த நேரத்தில், அரிசி ஏற்றி வந்த லாரியின் பின்னால் வந்த லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. 3 லாரிகளும் ஒன்றோடொன்று மோதியதில், ஓட்டுனர்கள் சாதிக், கலையரசன் மற்றும் கிளீனர் கிருஷ்ணன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை கண்ட அருகே உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கும் கீரனூர் காவல் துறைக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் லாரியின் இடிபாடுகளில் சிக்கிய 3 பேரையும் ஜேசிபி இயந்திரம் மூலம் லாரிகளை உடைத்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஒருவர் கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் 3 லாரிகளும் பலமாக நொறுங்கி சேதமடைந்தன. விபத்தினால் சாலைகளில் அரிசி மூட்டைகளும், செங்கல்களும் சிதறி கிடந்தன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது.