பொம்மையில் மறைத்துக் கடத்தப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல்: ஆந்திர சிறுவன் கைது
சென்னை: குவைத்தில் இருந்து விளையாட்டு பொம்மைகள் மற்றும் சாக்கலேட்டுகளில் மறைத்து 3 கிலோ தங்கத்தை கடத்தி வந்த ஆந்திர சிறுவனை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நேற்று காலை சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சுற்றுலா விசாவில் குவைத் சென்று திரும்பிய ஆந்திர மாநிலம் கடப்பா ராஜம்பேட் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் உண்டானது.
அதனைத் தொடர்ந்து அவனது உடைமைகளை சோதனை செய்தபோது அவற்றில் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவனது சூட்கேசில் நிறைய விளையாட்டு பொம்மைகள், குழந்தைகளுக்கான சாக்லெட்டுகள், பிஸ்கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
அது தொடர்பாக அதிகாரிகள் கேட்டதற்கு, ஆந்திராவில் பொம்மைக் கடை வைக்கப் போவதாக சிறுவன் பதிலளித்துள்ளான். சிறுவனின் பதிலில் திருப்தியடையாத அதிகாரிகள் பொம்மைகளை எடுத்து சோதனையிட்டபோது, அவற்றில் தங்கம் மறைத்து வைக்கப் பட்டிருந்தது கண்டு பிடிக்கப் பட்டது.
சுமார் 3 கிலோ தங்கத்தை சிறுவன் கொண்டு வந்திருந்த பொம்மைகள் மற்றும் சாக்லெட்டுகளில் இருந்து அதிகாரிகள் பிரித்தெடுத்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.90 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ஆந்திர சிறுவன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு தற்போது சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப் பட்டுள்ளான்.