மதுவுக்கு அடிமைகளாகும் டாஸ்மாக் ஊழியர்கள்: 13 ஆண்டுகளில் 4011 பேர் பலி
சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களில் ஏராளமானோர் மதுவுக்கு அடிமையாகியிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் 4,011 உயிரிழந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. குடிப்பவர்கள் எண்ணிக்கையும், கடைகள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன. எனவே டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்கங்களே தற்போது அரசை வலியுறுத்தி வருகின்றன.
தமிழகத்தில் 2003ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை தொடங்கப்பட்டது. இப்பணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். டாஸ்மாக் நிறுவனத்தில் வருவாய் 2004ம் ஆண்டு ரூ.4,867 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.26,852 கோடியாக அதிகரித்துள்ளது.

ஊதியம் எவ்வளவு
ஆரம்பத்தில், டாஸ்மாக் கடைகளில் பணிபுரிய மேற்பார்வையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம், விற்பனையாளர்களுக்கு ரூ.1,500 என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. சமுதாயத்தில் மரியாதை இல்லாத இந்த வேலையில் சேர இளைஞர்கள் ஆர்வம் செலுத்தாத காரணத்தால் மேற்பார்வையாளருக்கு ரூ.3,000, விற்பனையாளருக்கு ரூ.2,000, உதவி விற்பனையாளருக்கு ரூ.1,500 ஊதியம் வழங்கப்படும் என மீண்டும் அறிக்கப்பட்டது.

பட்டதாரி இளைஞர்களும்
டாஸ்மாக் கடையில் வேலை செய்ய எஸ்.எஸ்.எல்.சி. முதல் பட்டதாரிகள் வரை விண் ணப்பித்தனர். இவர்களில், 36,000 பேரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேர்வு செய்து, 6,286 கடைகளில் பணி நியமனம் செய்தனர். தற்போது டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை 6,856 ஆக அதிகரித்துள்ளன.

டாஸ்மாக் வருவாய்
டாஸ்மாக் நிறுவனத்தில் வருவாய் 2004ம் ஆண்டு ரூ.4,867 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.26,852 கோடியாக அதிகரித்துள்ளது. குடிப்பவர்கள் எண்ணிக்கையும், கடைகள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன. ஆனால், 36 ஆயிரமாக இருந்த ஊழியர்கள் எண்ணிக்கை, 26,865 பேராக குறைந்துவிட்டனர்.

வேறு பணிக்கு மாறுதல்
இதற்குக் காரணம் சமுதாயத்திலும், குடும்பத்திலும் மதிப்பில்லாத இந்த வேலையில் தொடர விருப்பம் இல்லாத டாஸ்மாக் ஊழியர்கள் பலர் சுயதொழில், தமிழக அரசுப்பணி தேர்வு எழுதி வேறு பணிக்கு சென்றுவிட்டனர்.

குடிக்கு அடிமை
டாஸ்மாக் கடைகள் தொடங்கியபோது நான்கு ஆண்டு வேலை நியமன தடை சட்டம் நடைமுறையில் இருந்தது. இதனால், படித்த இளைஞர்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லாததால் இந்த வேலையில் சேர்ந்தனர். பெரும்பாலான ஊழியர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டதாக தெரிவிக்கிறார் தமிழ்நாடு டாஸ்மாக் ஏ.ஐ.டியூ.சி. சங்க மாநில செயலாளர்.

4,011 பேர் மரணம்
1,500 பேர் முதல் 2,000 பேர் வரை தற்போது ‘சஸ்பெண்ட்', ‘டிஸ்மிஸ்' நடவடிக்கையில் உள்ளனர். மீதியுள்ளவர்களில் 4,011 பேர் மரணமடைந்துள்ளனர். குறிப்பாக கடந்த 2012, 2013, 2014 ஆகிய மூன்று ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

விபத்து, நோய் பாதிப்பு
டாஸ்மாக் ஊழியர்கள் பலரும் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். பலர் குடித்துவிட்டுதான் கடையை திறக்கின்றனர். இரவு நேரங்களில் ஊழியர்கள் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதால் விபத்தில் மரணமடைகின்றனர். மது குடித்தே மாரடைப்பு, கல்லீரல், மஞ்சள் காமாலை நோயால் எராளமானோர் உயிரிழக்கின்றனர்.

ஊழியர்கள் தற்கொலை
வெளியூர்களில் தங்கி பணிபுரியும் ஊழியர்கள், வாரம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுக்குச் செல்கின்றனர். குடும்பங்களில் பிரச்சினை ஏற்பட்டு பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடைகளை
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. முதற்கட்டமாக மாதத்தின் முதல் சனி, ஞாயிறு விடுமுறை அளிக்க வேண்டும். விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும். மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்து படிப்படியாக மூடலாம் என்றும் பணியாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications