என்ன கொடுமை இது.. 9 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 15 வயது சிறார்கள் 3 பேர் கைது!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video
பொள்ளாச்சி: காலம் படு வேகமாக கெட்டுக் கொண்டிருக்கிறது. பெண் குழந்தைகளை வெளியில் அனுப்பவே இயலாத அளவுக்கு நாடு மோசமாகிக் கொண்டிருக்கிறது.
பொள்ளாச்சி அருகே இயங்கி வரும் அரசு நடுநிலை பள்ளி அது.
ஆரம்ப சுகாதார மைய குழுவினர் மருத்துவ முகாமினை நடத்த இங்கு வந்திருக்கிறார்கள். முகாம் நடந்துகொண்டிருக்கும்போதே அவர்கள் ஆடிப்போய்விட்டார்கள். காரணம், பள்ளியில் 6 முதல் 9 வயதுடைய மாணவிகள் 5 பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் வந்து மாணவிகளிடம் விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் மருத்துவ குழுவினருக்கு இப்போது தூக்கிவாரிப்போட்டது. 3 பேர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது 15 வயது சிறுவர்கள் 3 பேராம்.
இதையடுத்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அதில் ஒருவன் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படிக்கிறானாம், மற்ற இரண்டு பேர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்களாம்.
பாலியல் வழக்கு அதிகரிப்பு
என்னதான் நடக்கிறது தமிழகத்தில்? நாடே தறிகெட்டு பயணித்து கொண்டிருக்கிறது. சமீப காலமாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டத்தின் கீழ் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முன்பெல்லாம் பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டால் அவர்களது குடும்பத்தினர் புகார் கொடுக்க முன் வர தயங்கி ஒதுங்கி தங்களுக்குள்ளேயே புழுங்கி கிடந்தார்கள். இப்போது, போக்சோ சட்டத்தின் மூலம் பாலியல் குற்றங்களின் பேரில் வழக்குபதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுவது ஓரளவு ஆறுதலாகவே இருந்தாலும், இந்த பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லையே.
எல்லாமே பிரச்சினைதான்
எத்தனையோ கிராமங்களில், குடும்பங்களில் இன்னமும் பாலியல் குற்றங்கள் சத்தமில்லாமல் அரங்கேறுவதுடன் அவை மறைக்கப்பட்டும் விடுகின்றன. பாலியல் வன்மம் பல ரூபங்களில் நடமாட என்ன காரணம்? பிரச்சினை எங்கு இருக்கிறது? சமூக அமைப்பிலா? பற்றாக்குறை கல்விமுறையிலா? பிள்ளைகள் வளர்ப்பிலா? பாலியல் குறித்த தெளிவின்மையிலா? எல்லாமே பிரச்சினைதான். எல்லா இடமும் பிரச்சினைதான், அறிவியல் வளர்ச்சி பெருக பெருக...தொழில்நுட்பம் கூட கூட... மனதில் குப்பைகளும், கசடுகளும் நிறைந்து வழிகின்றன.
மனிதமிருகத்தின் ரூபங்கள்
ஒருபுறம் விண்வெளிக்கு செயற்கைகோள் ஏவப்பட்டுவருகிறது. மற்றொருபுறம் வயது பாரபட்சமில்லாமல் பெரும்பாலான பெண்கள் சதைப்பிண்டங்களாக சிதைக்கப்பட்டு வருகிறார்கள். மனிதன் இன்னமும் மிருகமாகவே இருந்து கொண்டு விஞ்ஞானம் மட்டும் முன்னேறி என்ன பயன்? குறைந்தபட்சம் தொடுதலும், உரசல்களும் காட்டுமிராண்டிகளின் பல வடிவங்களில் எந்நேரமும் உலகில் எங்காவது ஒரு மூலையில் தினமும் அரங்கேறிகொண்டுதான் இருக்கின்றன.
ஆபாச இணையதளங்களும்
உண்மையில் சிறுவர், சிறுமியர்களை பெற்றோர்களும், ஆசிரியர்களும் வளர்ப்பதில்லை. ஊடகங்களும், சினிமாக்களும்தான் அவர்களை வளர்க்கின்றன. தொலைக்காட்சியில் வக்கரித்துப்போன ரசனைகள் உருவாகும் தொடர்களும், செல்போனில் ஏராளமாக வலம் வரும் ஆபாச இணையதளங்களுமே அவர்களை பாழ்படுத்தியுள்ளன. ஆட்சியாளர்கள் ஊடகங்களை கட்டுப்படுத்தி.... நெறிப்படுத்த வேண்டியது உடனடி கடமையாகும். பண்பாடு என்ற பெயரில் பேச முடியாத, பேச வழியில்லாத, பேச தயங்குகிற சில விஷயங்களை இந்த சமுதாயம் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. ஒருபக்கம் செக்ஸ் பற்றி பேச தயக்கம், மற்றொருபுறம் விபச்சாரத்திற்கு லைசன்ஸ் என்றால் இதை எப்படி பார்ப்பது? இதற்கு அரசு தெளிவான ஒரு முடிவும், செயல்வடிவமும் தரவேண்டும்.
இழந்தது அதிகம்
பாலியல் குற்றங்களுக்கு வெறும் அதிகபட்ச தண்டனை மட்டுமே தீர்வாகிவிடாது. பிரச்சினையை வேரோடு பிடுங்கியெறியப்பட வேண்டும். உருத்தெறியாமல் அழிக்கப்பட வேண்டும். தடம் தெரியாமல் தகர்த்தெறியப்பட வேண்டும். இன்றைய இளைய சமுதாயம் சீர்கெட்டு போயுள்ளது என்று மாதர் சங்க அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் வெறும் ஒற்றை கருத்தினை மட்டும் பதிவு செய்யாமல், கள ஆய்வில் இப்போதே இறங்க வேண்டும். இன்றைய குழந்தைகள் பெற்றதைவிட இழந்ததே அதிகம் என்பதை மனதில் கொண்டு ஆட்சியாளர்களும், கல்வியாளர்களும் பெற்றோர்களும் செயல்பட்டால்தான் 10 ஆண்டுகளிலாவது இந்த பாலியல் குற்றங்கள் ஓரளவு குறைய வாய்ப்பு ஏற்படும்.