சென்னையில் ஒரு கின்னஸ் சாதனை – 50,000 பேர் இணைந்து உருவாக்கிய "மனித தேசியக்கொடி"
சென்னை: கின்னஸ் சாதனைக்காக 50 ஆயிரம் பேரை கொண்டு மனித தேசியக் கொடி சென்னையில் உருவாக்கப்பட்டது.
50 ஆயிரம் பேரைக் கொண்டு மிகப்பெரிய அளவில் மனித தேசிய கொடியை உருவாக்கும் கின்னஸ் முயற்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று காலை நடைப் பெற்றது.
இந்த கின்னஸ் முயற்சியில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதன்மூலம், இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் 29,000 பேரை கொண்டு பாகிஸ்தான் செய்த உலக சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக காலை 6 மணி முதலே கல்லூரி மாணவர்களும் வரத் தொடங்கினர். மைதானத்தின் அனைத்து வாயில்கள் வழியாகவும் மாணவர்கள் குவிந்தனர்.
கொடி உருவாக்கம் நடைபெற்ற பிரதான மைதானத்தின் வாயிலில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிற அட்டைகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது.
அந்த வண்ண அட்டைகளை பெற்ற பின் மாணவர்கள் தேசிய கொடி வடிவில் நின்றனர். ஓரிரு பயிற்சிக்கு பிறகு கின்னஸ் சாதனைக்கான கவுண்டவுன் தொடங்கப்பட்டது.
சரியாக 5 நிமிட முடிவில் கின்னஸ் அமைப்பின் சார்பாக கலந்துகொண்ட துருக்கி நாட்டை சேர்ந்த ஷாகிலா கின்னஸ் சாதனையை அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சியை ரோட்டரி இந்தியா அமைப்பு நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார்.