பிறந்த குழந்தையின் வாயில் 50 கிராம் கட்டி: ஆபரேசன் மூலம் அகற்றம்
சென்னை: பிறந்து இரண்டு நாளே ஆன அந்த குழந்தையின் வாயில் இருந்த கட்டியை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்தனர். லட்சத்தில் ஒரு குழந்தைக்கு வரும் டெரட்டோமோ என்ற நோய் அந்த குழந்தைக்கு தாக்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை சூளையை சேர்ந்த கீசகன் - லதா தம்பதிக்கு கடந்த 7ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போது அதன் வாயில் பெரிய கட்டி இருந்தது. இதனால் மூச்சுத் திணறலுடன் பால் குடிக்க முடியாமல் தவித்தது. இதனையடுத்து எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு கடந்த 9ஆம் தேதி சென்றுள்ளனர்.
இதனையடுத்து எழும்பூர் பச்சிளங்குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை தலைவர் செந்தில்நாதன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். 5 டாக்டர்கள் கொண்ட குழு சுமார் 2 மணி நேரம் போராடி நவீன அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.பின்னர் ஒருவாரம் வென்டிலேட்டரில் வைத்திருந்தனர். தொடர்ந்து NICU பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எழும்பூர் பச்சிளங்குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை தலைவர் செந்தில்நாதன், இதுபோன்ற அறுவை சிசிக்சைக்கு தேவையான அனைத்து கருவிகளும் இங்கு உள்ளது.
இந்த கட்டி 50 கிராம் எடை கொண்டது. கட்டியை முழுமையாக அகற்றிவிட்டாலும், குழந்தையின் நாக்கு மற்றும் தாடையில் பிளவு உள்ளது.
அந்த பிளவுகளை அடுத்த கட்ட அறுவை சிகிச்சை மூலம் ஓட்டி விடுவோம். தற்போது குழந்தை நல்ல நிலையில் உள்ளது.
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.1.3 கோடி மதிப்பில் உயர்தர அறுவை சிகிச்சை அரங்கம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அமைக்கும் பட்சத்தில் எந்தவித சிக்கலான அறுவை சிகிச்சையும் தமிழகத்தில் செய்ய முடியும் என்று கூறினார்.
கடந்த 30 ஆண்டுகளில் இதேபோன்று 10 குழந்தைகளுக்கு எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளார்களாம். இந்த அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.