இத்தனை வசதிகள் வந்தும், 6% தமிழகப் பெண்கள் இன்னும் வீட்டிலேயே பிரசவிக்கிறார்களாம்!
சென்னை: தமிழகத்தில் மருத்துவ வசதிகள் மேம்பட்டும், எத்தனையோ வசதிகள் வந்தும் கூட கடந்தாண்டு 6 சதவீத பெண்களுக்கு வீட்டிலேயே பிரசவம் நடந்துள்ளதாக தேசிய மாதிரி சர்வே நிறுவனத்தின் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம், தமிழகத்தில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நிகழ்வதாக கூறி வந்த தமிழக அரசின் முகமூடி கிழிந்துள்ளது.
ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறுபிறப்பு. அத்தகைய பிரசவங்கள் பாதுகாப்பாக, சுகாதாரமான முறையில் நடைபெற வேண்டும். அதன்மூலமே, தாய், சேய் இருவருக்கும் ஆரோக்கியமான எதிர்காலம் கிடைக்கும்.
வீட்டிலேயே பிரசவங்கள்...
ஆனால், அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ள இந்த காலகட்டத்திலும் சில இடங்களில் பிரசவங்கள் வீட்டிலேயே நடப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
1000ல் 57 பேருக்கு...
தேசிய மாதிரி சர்வே நிறுவனத்தின் மூலம் கடந்தாண்டு தமிழகத்தில் நடந்த பிரசவங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. அதில், 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் சராசரியாக 1000 பேரில் 57 பேருக்கு வீட்டிலேயே பிரசவம் நடந்தது தெரிய வந்துள்ளது.
அபாயம்...
இவ்வாறு வீட்டிலேயே பிரசவம் நிகழ்வதால் தாய், சேய் இருவரின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். சில நேரங்களில் பிரசவத்திற்குப் பிறகான அதிக ரத்தப்போக்கால் பெண்கள் உயிரிழக்கும் அபாயம் கூட இருப்பதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.
நோய்த் தொற்று...
அதே போல், பிறக்கும் குழந்தைகளும் சிலப்பல காரணங்களால் அபாய நிலைக்கு தள்ளப் படுவதாக அவர்கள் கூறுகின்றனர். மேலும், குழந்தையின் தொப்புள் கொடியை சுத்தமில்லாத கருவிகளால் துண்டிப்பதால், நோய்த்தொற்று வாய்ப்புகளும் அதிகம் என்கிறார்கள்.
புள்ளி விவரம்...
மாநில புள்ளிவிவரப்படி, 23.4 சதவீத அளவுக்கு ஆரம்ப சுகாதார மையங்களில் பிரசவம் நடந்துள்ளது. 44.4 சதவீத அளவுக்கு அரசு மருத்துவமனைகளிலும், 32 சதவீத அளவுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் பிரசவம் நடந்துள்ளது. ஒரு சதவீத அளவில்தான் வீடுகளில் பிரசவம் நடந்ததாக அரசுத் தரப்பு புள்ளிவிவரம் தெரிவிப்பதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.