சென்னையில் துணிகரம் - ஹோண்டா ஷோரூக்குள் புகுந்து 7 கார்கள் கொள்ளை.. 20 பேர் கும்பல் அட்டகாசம்!
சென்னை: சென்னையில் அதிகாலையில் கார் ஷோரூமுக்குள் புகுந்து 20 பேர் கொண்ட கும்பல் காவலாளியைத் தாக்கி விட்டு 7 ஹோண்டா கார்களைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக போலீஸார் உஷார்படுத்தப்பட்டதால் கொள்ளைக் கும்பல் 7 கார்களையும் வளசரவாக்கத்தில் விட்டு விட்டுத் தப்பிச் சென்று விட்டது. அந்தக் கார்களை போலீஸார் மீட்டுள்ளனர்.
சென்னை புறநகரான மணப்பாக்கம் பகுதியில் ஹோண்டா கார் ஷோரூம் உள்ளது. இங்கு இன்று அதிகாலையில் 20 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி மனோகரனைக் கடுமையாகத் தாக்கி காயப்படுத்திய கும்பல் ஷோரூமுக்குள் புகுந்து அங்கிருந்த 7 புதிய கார்களை கொள்ளையடித்துச் சென்றது.
காயமடைந்த மனோகரன், ஷோரூம் நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தார். உடனடியாக காவல்துறைக்குப் புகார் பறந்தது. காவல்துறையினர் கட்டுப்பாட்டு அறை மூலமாக அனைத்துக் காவல் நிலையங்களையும் உஷார்படுத்தினர். அதிகாலையில் தீவிர வேட்டை தொடங்கியது.
இந்த நிலையில் வளசரவாக்கம் பகுதியில் 7 புத்தம் புதிய ஹோண்டா கார்கள், நம்பர் பிளேட்டுடன் நிற்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ஒரு போலீஸ் படை விரைந்தது. ஷோரூம் ஊழியர்களும் உடன் சென்றனர். அந்தக் கார்களைப் பார்த்த ஊழியர்கள், அது தங்களது ஷோரூமில் இருந்த கார்கள்தான் என்று அடையாளம் காட்டினர்.
கார்களைத் திருடிய கும்பல் அதில் போலியான நம்பர் பிளேட்டுகளைப் பொருத்தியிருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். அந்தக் கார்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் அதிகாலையில் கார் ஷோரூமுக்குள் நுழைந்து 20 பேர் கொண்ட கும்பல் நடத்திய இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.