ஓபிஎஸ் கோஷ்டியுடன் பேச வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு!
அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியினருடன் இணைப்பு குறித்து பேச்சவார்த்தை நடத்த வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் எம்பி தலைமையிலான குழுவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி அமைத்துள்ளது.
இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து நெருங்கி வந்து கொண்டிருப்பதை அவ்வபோது தேர்தல் ஆணையம் எச்சரிக்கை மணி அடித்துச் சொல்லி வருகிறது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக இரண்டு அணிகளும் ஜுன் 16ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் இன்று நாள் குறித்துள்ளது.
எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கம் வேறுபாடுகள் காரணமாக கைவிட்டுவிடக் கூடாது என்பதால் முதலமைச்சர் எடப்பாடி பானிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ராஜ்யசபா எம்.பி. வைத்திலிங்கம் தலைமையில் எடப்பாடி அணி சார்பில் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, வீரமணி உள்ளிட்ட 7 பேர் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் விரைவில் ஓபிஎஸ் கோஷ்டியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.