ஆர்.கே.நகரில் 8 காவல் உயர் அதிகாரிகள், 14 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி!
சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 22 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து இடைத்தேர்தலுக்கு இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 22 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வட சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார். வடசென்னை இணை ஆணையராக பாஸ்கரன், புளியந்தோப்பு துணை ஆணையராக ராமர், வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக ஷசாங்சாய், வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக அர்னால்டு ஈஸ்டர், திருவெற்றியூர் உதவி ஆணையராக ரகுராம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ராயபுரம் உதவி ஆணையராக தனவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.கே.நகர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக சுந்தரம், எம்.கே.பி நகர் உதவி ஆணையராக அன்பழகன் ஆகியோர் உள்பட 22 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி பிறப்பித்துள்ளார். பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.