6 நாட்களாக கரையில் மிதந்து துர்நாற்றம் வீசிய திமிங்கலம்... கோடியக்கரையில் புதைப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அருகே கடலில் இறந்து துர்நாற்றம் வீசிய திமிங்கலம் 6 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டு கோடியக்கரையில் புதைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி கடற்கரையில் இருந்து சிறிது தூரத்தில் கடல் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி காலை ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் ஒதுங்கியது. அந்த திமிங்கலம் 35 அடி நீளமும் 16 அடி அகலமும் இருந்தது.
இந்நிலையில் இந்த திமிங்கலம் கரை ஒதுங்க போதுமான ஆழம் இல்லாததால் கரை ஒதுங்க ஒரு மாதம் வரை ஆகலாம் என்றும் கரை ஒதுங்கும் போது அதிகமான துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அதற்குள் மீன்வளத்துறையினர் அந்த திமிங்கலத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மீன்வளத்துறை மற்றும் வனத்துறையினரும் திமிங்கலத்தை அகற்ற மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசிவந்தனர். ஆனால் 6 நாட்கள் ஆகியும் இறந்து துர்நாற்றம் வீசிய திமிங்கலம் மீட்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் அச்சமடைந்து கடலில் மீன்பிடிக்கவும் முடியவில்லை என்று புகார் செய்தனர்.
இந்நிலையில் நேற்று மீன்வளத்துறையினர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் உள்ளுர் மீனவ பிரதிநிதிகள் உதவியுடன் நான்கு படகுகள் ஒன்றன்பின் ஒன்றாக கயிறு கட்டி இறந்த திமிங்கலத்தின் கழுத்து நெஞ்சு பகுதியில் கயிறால் கட்டி கட்டுமாவடி கடலில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள மணமேல்குடி கோடியக்கரைக்கு இழுத்து வந்தனர். பின்னர் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி திமிங்கலத்தை அங்கு புதைத்தனர்.
இதன்பிறகே காட்டுமாவடி மீனவர்கள் நிம்மதியுடன் மீன்பிடிக்க ஆயத்தமாகியுள்ளனர். மணமேல்குடி கோடியக்கரை பகுதியில் திமிங்கலம் புதைக்கப்படும் தகவல் அறிந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்திருந்து ஆச்சிரியத்துடன் திமிங்கலத்தை பார்த்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.