விடாதே பிடி.. பைக்கில் போனவரை விபத்துக்குள்ளாக்கி தப்ப முயன்ற மாணவர்களுக்கு தர்ம அடி!
விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை விரட்டி பிடித்துபொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.
Recommended Video
சென்னை: சென்னையில் மது போதையில் காரை ஓட்டி பைக் மீது மோதிவிட்டு தப்பி சென்ற மருத்துவ கல்லூரி மாணவர்களை பொது மக்கள் விரட்டி பிடித்து தர்மடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூவிருந்தவல்லி அடுத்த காட்டுப்பாக்கம், ஸ்டாலின் நகரை சேர்ந்தவர் கார்த்திக் 35, கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்றிரவு வேலை முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.அப்போது மவுண்ட் - பூவிருந்தவல்லி சாலை, செட்டியார் அகரம் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த சொகுசு கார், பைக் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்றது.
இதில் கார்த்திக் படுகாயம் அடைந்தார். இதனைக்கண்டதும் அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் காயம் அடைந்த கார்த்திக்கை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் அங்கிருந்த சிலர் அந்த காரை விரட்டி ஆரம்பித்தனர். வேகமாக விரட்டி சென்ற பொதுமக்கள் அய்யப்பன்தாங்கல் பகுதியில் அந்த காரை மடக்கி பிடித்தனர். மேலும் அந்த காரில் இருந்த நபர்கள் கீழே இறங்காமல் காரின் உள்ளே இருந்தனர்.
பின்னர் வலுகட்டாயமாக கீழே இறக்கி அவர்களை தாக்கியது மட்டுமல்லாது விலையுயர்ந்த காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அந்த நபரையும், அடித்து நொறுக்கப்பட்ட காரையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதுகுறித்து பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் மதுரவாயலை சேர்ந்த மருத்துவர் திலிப் என்பவரது மகன் அக்ஷய் 23, என்பதும் போரூரில் உள்ள தனியார் மருத்து கல்லூரியில் 4ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வரும் இவர், மதுபோதையில் காரை ஓட்டி வந்து பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றும் தெரியவந்தது. இது குறித்து செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றபோது செய்தி சேகரிக்க கூடாது என்று பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு காவல்துறை ஆய்வாளர் சீனிவாசன் மிரட்டினார்.அதோடு மட்டுமல்லாமல் செய்தியாளர் படம் பிடிக்க கூடாது என்பதற்காக அவசர,அவசரமாக காரின் எண் அகற்றப்பட்டது. இதுகுறித்து அக்ஷய் யிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.