அடேங்கப்பா.. ஜன்னல் கம்பியில் அமர்ந்து பயணித்த புறா.. டிக்கெட் கொடுக்காத நடத்துநருக்கு மெமோ!
ஒரு புறாவுக்கு டிக்கெட் எடுக்கவில்லை என நடத்துனருக்கு மெமோ கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
சேலம்: பேருந்து ஒன்றில் புறா ஜன்னல் கம்பியில் அமர்ந்துகொண்டு பயணம் செய்துள்ளது. அதற்கு டிக்கெட் வாங்கவில்லை என அந்த பேருந்தின் நடத்துனருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், அரூரிலிருந்து மலை கிராமமான எல்லவாடிக்கு அரசு பேருந்து சென்றுள்ளது. அப்பேருந்தில் பயணம் செய்த குடிமகன் ஒருவர் புறாவிடம் உரையாடிபடியே சென்றுள்ளார். அப்போது பேருந்தை மறித்து ஏறிய டிக்கெட் பரிசோதகர்கள், புறாவுக்கு அவர் டிக்கெட் வாங்கியுள்ளாரா என கேட்க, நடத்துனர் இல்லை என பதில் அளித்துள்ளார்.
உடனே டிக்கெட் பரிசோதகர், அரசு பேருந்தில் பயணம் செய்யும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மனிதர்களுக்கு கொடுக்கும் டிக்கெட் விலையில் நான்கில் ஒரு பங்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என விதி உள்ளது தெரியாதா என கூறி, நடத்துனருக்கு மெமோ கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து கூறிய நடத்துனர், 30 பறவைகளுக்கு மேல் ஒருவர் கொண்டு வந்தால்தான் அவற்றுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என விதி இருக்கிறது. ஆகையால் விதியை மீறி மெமோ கொடுத்துள்ளனர் என கூறினார்.
அதற்கு பதில் அளித்த போக்குவரத்துத் துரை அதிகாரிகள், இந்த மெமோ குறித்தும் இதில் விதிமீறல் நடந்திருக்கிறதா என்பது குறித்தும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர். ஒரு புறாவுக்கு மெமோவா என பயணிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.