தமிழகத்தின் முதல்வராக ஒரு தலித் வரவேண்டியது காலத்தின் கட்டாயம்!
-டான் அசோக்
வீட்டைப் பிளந்து கொள்ளையடிக்கும் யுக்தி இன்னமும் இந்துத்துவ ஆதரவாளார்களால் பயன்படுத்தப்படுகிறது. வன்னியர் மாநாட்டில், "தாழ்த்தப்பட்டவர்கள் மீது நீங்கள் ஆதிக்கம் செய்யும்வரை உங்கள் மீதான ஆதிக்கம் நீங்காது," என கர்ஜித்தவர் பெரியார்.
தலித்களுக்கு கலைஞரைவிட சட்டபூர்வமாக நன்மைகளைச் செய்தவர் யாருமில்லை. அரசு அலுவலகங்களில் ஆவணங்கள் ரகசியமாக வைக்கப்பட்ட முறை இருந்தது. அதனால் தலித்துகளுக்கு பதவி உயர்வு தொடர்ந்து மறுக்கப்பட்டபோதும், அதை எதிர்த்து கேள்வி எழுப்ப முடியாத சூழல் இருந்தது. அதை மாற்றி ஆவணங்களை வெளிப்படையாக மாற்றியவர் கலைஞர்.
கலைஞர் கொண்டு வந்த 100-புள்ளி சுழற்சி முறை முழுக்க முழுக்க தலித்களுக்கு ஆதரவானது.
உதாரணமாக 2015 வருடம் 100 சப் இன்ஸ்பெக்டர்களை பணிக்கு எடுக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அதில் தலித் கோட்டாவில் 3 பேர் சேரவில்லை என்றால் அடுத்த ஆண்டான 2016 வேலைக்கு ஆள் எடுக்கும் போது, அந்த ஆண்டுக்கான தலித் கோட்டா போக, மேலும் 3 தலித்களுக்கு அந்த இடம் வழங்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மூன்று தலித்களும் 2016 ஆண்டு பேட்சில் முதல் மூன்று இடங்களில் இருப்பார்கள்.
இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகு தான் 2016 பேட்சில் முதல் மதிப்பெண் எடுத்தவருக்கே பதவி உயர்வு வரும்
இது எந்த மாநிலத்திலாவது உள்ளதா? எவ்வளவு அழகாக சட்டப்படி தலித்துகளுக்கான உரிமையை நிலைநாட்டியுள்ளார் கலைஞர்.
இதன் மூலம் ஒரு தலித் வேலையை விட்டு சென்றாலும் கூட அந்த பதவி உயர்வை மற்றொரு தலித்தான் பெற முடியும்.
இதையெல்லாம் அரசுப் பணியில் இருந்த தலித் தலைவர்களே கூட சொல்வதில்லை. அவ்வளவு ஏன்? தலித் என்பதால் நேர்முகத்தேர்வில் மருத்துவ இடம் கிடைக்காமல், பின்னர் கலைஞரிடம் முறையிட்டு கலைஞரால் நீதி வழங்கப்பட்டு மருத்துவர் ஆன கிருஷ்ணசாமிதானே இன்று திராவிட இயக்கத்தைப் பற்றி தவறாகப் பேசுகிறார். நேர்முகத்தேர்வு எனும் சாதி பார்த்து கல்லூரியில் இடம் வழங்கும் முறையை ஒழித்தது திராவிட இயக்கம் தானே.
இதெல்லாம் போக அண்ணா, மதியழகன், அன்பழகன், நெடுஞ்செழியன் என திராவிட இயக்கத்தில் முதலியார் ஆதிக்கம் அதிகம் இருந்ததாக பலர் சொல்வார்கள்.
ஆனால் அண்ணா தன்னை ஒடுக்கப்பட்ட இசைவேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பொட்டுக்கட்டப்பட்ட பெண்ணின் மகனாகத்தான் பார்த்தாரே தவிர, முதலியார் ஆணுக்கு பிறந்தவராக அல்ல. அதனால்தான் அண்ணாவை 'தேவடியாள் மகன்' என்றும், 'அப்பன் பேர் தெரியாதவன்' என்றும் ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியினராலும், காங்கிரசாலும் பேச முடிந்தது. சமீபத்தில் 'Anna was half brahmin' என சுப்பிரமணியசாமி ட்வீட் செய்ததும் அண்ணாவின் பரம்பரையைக் குறித்தே.
கலைஞர் இன்னும் ஒருபடி அதிகம். முழு இசைவேளாளர் குடும்பத்தில் பிறந்தவர். வைகோ தலித் தலைவரை திட்ட வேண்டுமென்றால் மிஞ்சிப் போனால் சாதியைச் சொல்லி திட்டியிருப்பார். அதற்கு கூட வன்கொடுமை சட்டம் என்ற ஒன்று உண்டு. ஆனால் கலைஞரை என்ன சொல்லி திட்டினார்? சாதிகளிலேயே இசைவேளாளர் சாதியைச் சேர்ந்தவர்களை மட்டும்தான் 'தேவடியாள் மகன்' எனத் திட்ட முடியும். தலித்துகளைக் கூட அப்படி திட்ட முடியாது. இதைவிட பெரிய இழி சொல் எது? வைகோ வாயில் கலைஞர் என்றவுடன் அதுதான் வந்தது.
தலித் என்றால் ஒடுக்கப்பட்டவர்கள் என சமஸ்கிருதத்தில் அர்த்தம். அண்ணா, கலைஞரை விட இங்கே யார் தலித்? திமுக ஆட்சியே ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒடுக்கப்பட்டவர்கள் செய்த தலித் ஆட்சிதான். இனியும் அப்படித்தான்.
நான் முன்னரே எழுதியதை ஒருமுறை நினைவு கூர்கிறேன். திராவிட இயக்கத்திற்கு அடுத்த தலைமையாக, தமிழகத்தின் முதல்வராக தலித் சமூகத்தை சேர்ந்தவர் வரவேண்டியது காலத்தின் கட்டாயம். மு.க.ஸ்டாலின் காலத்திற்குப் பிறகு அது நடப்பதை திராவிட இயக்கத்தினர் உறுதி செய்யவேண்டும். செய்வோம்!