ஆடி அமாவாசை: சதுரகிரி, காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு
மதுரை: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்களில் பல்லாயிரக்கணக்கான குவிந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தின் பாபநாசம் வனச்சரகத்தில் உள்ள அருள்மிகு சொரிமுத்து அய்யனார் கோயிலில் நடைபெற்று வரும் ஆடி அமாவாசை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பொங்கலிட்டு வழிபட்டு வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இங்கு மாதந்தோறும் அமாவாசை விழா சிறப்பாக நடைபெறும், ஆடி, புரட்டாசி, தை அமாவாசை விழாக்களின் போது பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா, நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாட்டுடன் துவங்கியது. மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்க சுவாமி கோயில்களில் மூலவர், மூலவர்களுக்கு எதிரே உள்ள நந்தீஸ்வரருக்கு 18 வகை அபிஷேகங்களுடன் பூஜைகள் நடந்தன.
இரண்டாம் நாளான நேற்று சிவராத்திரி வழிபாடு நடந்தது. இரவு முழுவதும் நடந்த பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான ஆடி அமாவாசை வழிபாடு இன்று நடைபெற்றது. காலை 6 மணிக்கு 18 வகை சிறப்பு அபிஷேகங்களுடன் சங்கொலி பூஜைகள் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடி அமாவாசை பூஜை
அமாவாசையுடன் குருப்பெயர்ச்சி தினம், ஆடி 18ம் பெருக்கு என மூன்று விசேசங்கள் ஒன்றாக வந்துள்ளதால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் குவிந்துள்ளனர். தாணிப்பாறை மற்றும் மலைக் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் சிரமம்
மலை அடிவாரத்தில் அறநிலையத்துறையின் சார்பில் பக்தர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட தங்கும் விடுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டது. மதுரை கலெக்டர் வீரராகவராவ் திறந்து வைத்தார். மலைக்கு வரும் பக்தர்கள், பாதுகாப்பு போலீசார், வனத்துறை அதிகாரிகள், மற்ற துறை அதிகாரிகள் தங்குவதற்கு இடமின்றி ரோடு , வயல், தோப்பு, வனப்பகுதியிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில்
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தின் பாபநாசம் வனச்சரகத்தில் உள்ள அருள்மிகு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பொங்கலிட்டு வழிபாடு
பக்தர்கள் அதிகாலையில் கோவிலில் பொங்கலிட்டு வழிபட்டனர். மதியம் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலையில் விரதமிருந்த பக்தர்கள் பட்டவராயன், சொரிமுத்து அய்யனார் கோவில் முன் பூக்குழி இறங்குகின்றனர். கோவில் பரம்பரை அறங்காவலரும், சிங்கம்பட்டி ஜமீன்தாருமான டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி பக்தர்களுக்கு ராஜ உடையில் காட்சி அளிக்கிறார்.
கூடாரம் அமைத்த பக்தர்கள்
திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வெள்ளிக்கிழமையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கிவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் கூடாரங்கள் அமைத்துத் தங்கியுள்ளனர்.