ஆதீனங்களுக்கு கிடுக்குப்பிடி - சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
அனைத்து ஆதீன மடங்களின் சொத்து விவரங்களை பதிவுத்துறை தலைவரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மதுரை: ஆதீன மடங்களுக்கு சொந்தமான அனைத்து சொத்து விவரங்களை பதிவுத்துறை தலைவரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சைவ மதத்தை வளர்ப்பதற்கு, அந்த மதத்தை தழுவியவர்களுக்கு உதவுவதும் தான் பழங்காலத்தில் ஆதீனங்கள் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு ஆதீனங்கள் உள்ளன. இவற்றுக்கு என்று பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளும், நிலங்களும் அந்தந்த மடத்தின் நிர்வாகம் மூலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
தருமபுரம், மதுரை, திருவாவடுதுறை என பல ஆதீனங்கள் தற்போதும் செயல்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடியில் உள்ள செங்கோல் ஆதீன மடத்துக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக சென்னை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில் தமிழகத்தில் உள்ள பல ஆதீனங்களிலும் இதே நிலை நீடிப்பதாகவும், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் மனுதாரர் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி கிருபாகரன், தாரண் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து ஆதீன மடங்களின் சொத்து விவரங்களை பதிவுத்துறை தலைவரிடம் தாக்கல் செய்ய வேண்டும் எனஉத்தரவிட்டனர். மேலும் இந்த சொத்துகள் குறித்து இந்து சமய அறநிலைத்துறைக்கு தெரியுமா என்றும், கடைசியாக அறநிலையத்துறை அதிகாரிகள் எப்போது இவற்றை ஆய்வு மேற்கொண்டனர் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்துவைத்தனர்