நெல்லை அருகே பெண் மீது ஆசிட் வீச்சு.. ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு
நெல்லை அருகே களக்காட்டில் பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை: திருநெல்வேலி அருகே பெண்ணின் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்தவர் ராமலட்சுமி (25). அங்குள்ள தனியார் செல்போன் கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. திருமணத்துக்கு முன்பு சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சின்னராசு என்பவருடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராமலட்சுமியிடம் செல்போனில் பேசி அவரை வரவழைத்திருக்கிறார் சின்னராசு. பின்னர் ராமலட்சுமியை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு களக்காடு சென்றார் சின்னராசு. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே சின்னராஜ் திடீரேன்று தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை ராமலட்சுமி வீசி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
தலை மற்றும் உடலில் ஆசிட் பட்டதால் ராமலட்சுமி அலறித் துடித்தார். அவரது அலறலை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே ராமலட்சுமியை மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடலில் 60 சதவீதம் காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து ராமலட்சுமியிடம் நெல்லை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிச்சைராஜன் வாக்குமூலம் பெற்றார். தப்பிஓடிய ஆட்டோ ஓட்டுநர் சின்னராஜுவை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த 2012ம் ஆண்டு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வினோதினி என்ற பெண் மீது ஆசிட் வீசப்பட்டது. இதில் முகம் முழுவதும் வெந்து கண் பார்வை பறிபோன நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய வினோதினி, 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.