கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை... கமல் முதல் நிர்வாகிகள் வரை அனைவருக்கும் ஒரே நிற உடை!
தனது அரசியல் கட்சியில் முழு கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் கமல் உடை விஷயத்திலும் ஒரே நிலைப்பாட்டை கடைபிடித்துள்ளார்.
Recommended Video
மதுரை : அரசியல் கட்சி தொடங்கியுள்ள கமல் தனது பயண ஆரம்பம் முதலே சொல்லி வரும் விஷயம் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது தான். இதற்கு ஏற்றாற் போல இன்று கடல் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் ஒரே மாதிரியான உடையை அணிந்து வந்து மேடையில் அணிவகுத்தனர்.
அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் கமல்ஹாசன் தொடக்கம் முதலே தனது ரசிகர்களிடம் கேட்டு வருவது ஒழுக்கத்தை கடை பிடிக்க வேண்டும் என்பது தான். மக்களின் குறைகளை தீர்க்கச் செல்லும் நம்மிடம் எந்த குறையும் இருக்கக் கூடாது என்று என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்.
அதே போன்று கமல் இன்று காலையில் ராமேஸ்வரத்தில் தொடங்கிய அரசியல் பயணம் முதல் மதுரை ஒத்தகடையில் நடைபெற்று வரும் மாநாடு வரை கட்டுப்பாட்டுடன் கமலின் அரசியல் பயணம் தொடங்கியுள்ளது.
மேடையில் போடப்படும் இருக்கைகளில் யாருக்கும் உயர்வு,தாழ்வு இருக்கக் கூடாது என்பதில் தீர்க்கமாக முன்கூட்டியே சொன்னார் கமல். இதே போன்று மேடையில் அமர்ந்திருந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மேடைக்கு வருபவர்கள் சால்வை, பூங்கொத்துகள் கொண்டு வர வேண்டாம் என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார் கமல்.
கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைத்து கமல் அறிமுக உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் மேடைக்கு அழைத்து அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
கமல்ஹாசன் முதல் அவரது கட்சி நிர்வாகிகள் வரை என அனைவரும் ஒரே மாதிரியான உடையை அணிந்திருந்தனர். கருப்பு நிற பேண்ட் மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்து வந்து அவர்கள் அனைவரும் தங்களது ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தினர்.