நடிகர் என்பதால் அடித்து உதைத்து பணம் பறித்தனர்.. போலீஸில் புகார் அளித்த கொட்டாச்சி!
நடிகர் என்பதால் அடித்து உதைத்த பணம் பறித்ததாக நடிகர் கொட்டாச்சி தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் என்பதால் அடித்து உதைத்த பணம் பறித்ததாக நடிகர் கொட்டாச்சி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை தாக்கி நகை மற்றும் பணத்தை பறித்த ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கிய பிரபல காமெடி நடிகர் கொட்டாச்சியை ஆட்டோவில் கடத்தி சென்ற 3 பேர் கும்பல் அவரை தாக்கி பணம், நகையை பறித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் கொட்டாச்சியை தாக்கியவர்களில் 2 பேர் ஆட்டோ டிரைவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் கொட்டாச்சி
சென்னை போரூரை சேர்ந்த பிரபல காமெடி நடிகர் கொட்டாச்சி தற்போது வயக்காட்டு மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு திருப்பூரில் நடைபெற்று வந்தது. நேற்று இவருக்கு பிறந்த நாள் என்பதால் சென்னையில் குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை செல்ல முடிவு செய்தார்.
நைசாக பேசி அழைத்த ஆட்டோ டிரைவர்
இதற்காக திருப்பூரில் இருந்து சேலத்திற்கு நேற்று அதிகாலை 1.45க்கு பஸ்சில் வந்தார். பஸ் ஸ்டாண்டின் வெளியே தனியார் சொகுசு பேருந்துகள் நிற்கும் இடத்திற்குச் செல்ல நடந்து வந்தபோது, பஸ் ஸ்டாண்டின் வாசலில் நின்றிருந்த ஒரு ஆட்டோ டிரைவர் அவரிடம் தான் அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து நடிகர் கொட்டாச்சி ஆட்டோவில் ஏறியுள்ளார். அதே ஆட்டோவில் மேலும் 2 பேர் ஏறியுள்ளனர்.
நகை, பணம் பறிப்பு
சூரமங்கலம் அருகே நரசோதிப்பட்டிக்கு நடிகர் கொட்டாச்சியை கடத்தி சென்ற 3 பேர் கும்பல் அவரை அடித்து உதைத்து அவரது செல்போன், அணிந்திருந்த 2 பவுன் நகை, கைவசம் இருந்த ரூ.2500, ஏடிஎம் கார்டு, அடையாள அட்டை ஆகியவற்றை பறித்துக்கொண்டு சாலையோரத்தில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.
போலீஸில் புகார்
இதையடுத்து விடியும் வரை அங்கேயே காத்திருந்த கொட்டாச்சி 3 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் தொடங்கியதையடுத்து அவ்வழியாக சென்றவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் உதவியுடன் சேலத்தில் உள்ள மற்றொரு நடிகரான பெஞ்சமினை சந்தித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் என்பதாலேயே
தான் நடிகர் என்பதாலேயே தன்னைத் தாக்கி நகை மற்றும் பணத்தை பெற்றதாகவும் அவர் கூறினார். நடிகர் கொட்டாச்சி நகை மற்றும் பணத்துக்காக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.