ஆக.27ல் ச.ம.க முக்கிய முடிவு...பிறந்தநாள் கூட்டத்தில் சரத்குமார் பேச்சு!
ஆகஸ்டு 27ம் தேதி நடைபெறும் மாநாட்டு சமத்துவ மக்கள் கட்சி முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : சமத்துவ மக்கள் கட்சியின் மாநாடு அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறுவதாக இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் அந்தக் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமாக சரத்குமார் தனது 63வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதே போன்று சமத்துவமக்கள் கட்சியின் 11ம் ஆண்டு துவக்கவிழாவும் கொண்டாடப்படுகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த இரண்டு நிகழ்ச்சியையொட்டி கூட்டம் நடைபெற்றது.
கட்சி நிர்வாகிகள் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய சரத்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜி.எஸ்.டி வரி விதிப்பால் பொருட்கள் உற்பத்தி அதிக அளவில் நடைபெறும் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ஏற்படும். எனவே அரசு கூடுதல் வரியை மக்கள் மீது சுமத்தாமல் மாநில வரி விதிப்பில் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
தமிழ்த் திரைப்பட விருதுகள் ஏறத்தாழ 6 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது, இனி வரும் காலங்களில் அந்தந்த காலகட்டத்திலேயே அரசுகள் விருதுகளை அறிவிக்க வேண்டும். ஆகஸ்ட் 27ம் தேதி சேலத்தில் நடைபெறும் சமத்துவ மக்கள் கட்சி மாநாட்டில் கட்சியின் வளர்ச்சிக்கான முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது, என்றும் கூறினார்.