உடலுக்கும், உள்ளத்திற்கும் நலம்பயக்கும் யோகாவிற்கு மதச்சாயம் பூசவேண்டாம்... நடிகர் சரத்குமார்
உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் பயக்கும் யோகாவிற்கு மதச்சாயம் பூச வேண்டாம் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை பயக்கும் யோகாவிற்கு மதச்சாயம் பூச வேண்டாம் என்று நடிகர் சரத்குமார் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் குறிப்பிடுகையில்,
யோகா என்ற சொல் குறிக்கும் பல அர்த்தங்களுள், 'உடலையும் மனதையும் ஒருங்கிணைத்தல்' என்ற அர்த்தமும் ஒன்று. நமது நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கற்பிக்கப்பட்டு.பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் யோகக் கலையின் பெருமைகளும், பலன்களும் எண்ணிலடங்கா.
அறிவாற்றல் கிடைக்கும்
மனஅழுத்தம் குறைதல்.ரத்த அழுத்தம் சீராதல்,ரத்த சர்க்கரை அளவு சமன்படுதல், இதயச் செயல்பாடு செம்மைப்படுதல், சிறுநீரகங்கள் பழுதின்றிச் செயல்படுதல், நிம்மதியான உறக்கம்,உணவு செரிமாணம், உடல் வலிகளிலிருந்து நிவாரணம், சுவாசக் கோளாறுகள் நீங்குதல், மனஉறுதியும்,அறிவாற்றலும் மேம்படுதல் என யோகப்பயிற்சியால் விளையும் நன்மைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். யோகாவின் பலன்கள் அனைத்தும்அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.
பலன்களை உணர வேண்டும்
இத்தகைய பலன்களை நன்கு உணர்ந்து கொண்டதால்தான், பெரும்பாலான உலக நாடுகளில் கூட யோகப் பயிற்சி முறைகள் பின்பற்றப்பட்டு, கற்றுத்தரப்படுகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் காண அதற்கென்று தனிப்பட்ட யோகப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒலிம்பிக், கிரிக்கெட் போன்ற போட்டிகளின் வீரர்களுக்கு யோகாவும் சேர்த்து பயிற்றுவிக்கப்படுகிறது.
யோகா கட்டாயம்
தமிழகத்தில் பள்ளிகளில் யோகா கட்டாயமாக கற்றுத்தரப்படும் என்ற நல்லதொரு அறிவிப்பைத் தமிழக முதலமைச்சர் வெளியிட்டிருக்கிறார். ஆனால், வழக்கம்போல எதிர்க்கவேண்டுமே என்பதற்காக மட்டும் சில தவைவர்கள் ‘யோகா மதம் சார்ந்த விஷயம்; இதைத் திணிக்கக்கூடாது' என்று எதிர்ப்பத் தெரிவித்து வருகிறார்கள். நம்நாட்டில் தோன்றிய கலையை உலக நாடுகள் ஏற்று கற்றுக்கொள்ளும்போது, நாம் ஏற்க மறுப்பது வேடிக்கையாக உற்ளது.
நினைவாற்றல் பெருகும்
மாணவர்களுக்கு யோகா கற்றுத் தருவதன் மூலம் அவர்களது நினைவாற்றல் பெருகும்.மன ஒருங்கிணைப்பு அதிகரிக்கும்.உடல் வலிமை கூடும்.தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிற உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளோடு ஒப்பிடுகையில் யோகாவை செலவு இல்லாமல் சுலபமாக கற்றுக்கொள்ள முடியும். யோகா பயிற்சி, மாணவர்களுக்கு பள்ளிப் பருவம் கடந்தும் அவர்களது எதிர்காலத்தில் ஆரோக்கியமான உடல்நிலைக்கும், மனநிலைக்கும் வழிவகுக்கும்.
உடல் நலனும், மன நலனும் சார்ந்தது
எனவே பள்ளிகளில் யோகா கூடாது என்று சொல்பவர்கள், யோகா என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது, அது முற்றிலும் உடல்நலனும், மனநலனும் சார்ந்தது என்பதை உணர்ந்து,எதிர்ப்புத்தெரிவித்து வருவதைக் கைவிடவேணடும்.அல்லது யோகாவால் எந்தப் பலனும் கிடையாது என்பதை அறிவுப்பூர்வமாக நிரூபித்துவிட்டாவது எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். எதிர்ப்பு தெரிவிக்கும் முன்னர் மக்கள் மனநிலை என்னவென்று அறியமுற்படவேண்டும்.பள்ளிகளில் கற்றுத்தராவிட்டாலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு பயிற்சி வகுப்புகளில் யோகா கற்றுக்கொள்ளச் செய்கிறார்கள்.பள்ளிகளிலேயே கற்றுத்தந்தால் நிச்சயம் மகிழ்வோடு வரவேற்பார்கள்.
யோகா பயிற்சி
எனவே அரசியல் ஆதாய நோக்கிலும், வெற்று விளம்பர நோக்கிலும் மட்டுமே யோகா பயிற்சிக்கு மதச்சாயம் பூசி கருத்து வெளியிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட தலைவர்கள் மற்றும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.