ஜெயலலிதா அளித்த அடையாளமே எனக்கு போதும் - நடிகை விந்தியா பேட்டி
நடிகை விந்தியா ஜெயலலிதா சமாதிக்கு சென்று மாம்பழங்களை படையலாக வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்கு அளித்த அடையாளமே போதும் என நடிகையும், அதிமுக பேச்சாளருமான விந்தியா கூறியுள்ளார்.
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் சமாதியில் திடீரென தியானம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி தமிழக அரசியலை புரட்டி போட்டது. அதிமுகவும் பிளவுபட்டது. இரட்டை இலை சின்னமும் முடக்கபட்டது.
கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவும் சிறைக்கு சென்றார். அவரால் நியமிக்கப்பட்ட துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் திஹார் சிறையில் உள்ளார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த நடிகையும், அதிமுக பேச்சாளருமான விந்தியா இன்று மாலை மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதிக்குப் வந்தார்.
அப்போது ஜெயலலிதாவின் சமாதியில் மாம்பழங்களை வைத்து விந்தியா அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விந்தியா, ஆதாயம் தேடுபவர்களே அணியை தேடுவார்கள். ஜெயலலிதா அளித்த அடையாளமே எனக்கு போது. இரட்டை இலை சின்னத்தை மீட்கவும், கட்சியை காப்பாற்றவும் இரு அணிகள் இணைவதில் தவறில்லை என்று கூறினார்.