ஆதிபராசக்தி மாணவர் மர்ம மரணம்... ஹைகோர்ட் உத்தரவுப்படி பிரேத பரிசோதனை
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரியில் மர்மமான முறையில் மரணமடைந்த மாணவர் யுவராஜின் உடலுக்கு 3 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை: ஆதிபராசக்தி பார்மசி கல்லூரியில் மர்மமாக மரணமடைந்த மாணவன் யுவராஜின் பிரேதபரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், அந்த உடலை பாதுகாக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து 3 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்வதோடு அதை வீடியோவில் பதிவு செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சார்ந்தவர் கு.பரமசிவன். இவரது மகன் யுவராஜ் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி நிறுவனத்தில் பார்மசிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பார்மசி படித்து வந்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சகமாணவரின் சகோதரர் இறப்பு நிகழ்வில் கலந்துகொள்ள கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் அனைவரும் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த போரட்டத்தை மரணமடைந்த மாணவன் யுவராஜ் தனது செல் போனில் படம் பிடிக்கவே, அதனை கல்லூரி நிர்வாகம் கண்டித்தது. யுவராஜ் உள்ளிட்ட அனைத்து மாணவர்களின் செல்போனையும் பறிமுதல் செய்து கொண்டது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை திரும்ப தரவேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் கேட்டுவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி மாணவன் யுவராஜ் கல்லூரி விடுதியின் கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். விசாரணை நடத்திய போலீசார் தொடர் வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப்பதிவு செய்து மாணவன் யுவராஜ் உடலை செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தனது மகனின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும், யுவராஜின் உடலை மருத்துவர்கள் அடங்கியகுழு பிரேதபரிசோதனை செய்ய வேண்டும், அவற்றை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று மாணவனின் தந்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி மகாதேவன், செங்கல்பட்டு அரசு மருத்துமனை மருத்துவர்களே பிரேதபரிசோதனை செய்யலாம் என்று உத்தரவிட்டார். மேலும் அதை வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஜுன். 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதுவரையில் அந்த மாணவனின் உடலை பாதுகாத்து வைக்க வேண்டும் என்று செங்கல்பட்டு மருத்துமனை டீனுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து 3 பேர் அடங்கிய மருத்துவர்கள் இன்று பிரேத பரிசோதனை செய்து அதை வீடியோவில் பதிவு செய்து வருகின்றனர்.