மறுபடியும் அழனுமா.. அப்பீல் அதிர்ச்சியில் அதிமுகவினர்.. புதுக்கோட்டையில் ஒருவர் மரணம்!
சென்னை: ஜெயலலிதாவுக்கு ஆதரவான கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்திருப்பது தமிழக எதிர்க்கட்சிகளுக்கு வாயில் பாயாசம் ஊற்றியது போல இருந்தாலும், மறுபக்கம் அதிமுகவினருக்கு வயிற்றில் டைரக்டாக ஆசிட் ஊற்றியது போல டென்ஷனாக காணப்படுகிறார்கள். மறுபடியும் அம்மாவுக்கு சிக்கல் வருமோ என்ற பதைபதைப்பு அவர்களிடம் மிதமிஞ்சிக் காணப்படுகிறது.
கடைசி வரை எப்படியாவது கர்நாடக அரசு இழுத்தடித்து விடும். அப்பீல் வரவே வராது. கர்நாடகத்தில் உள்ள அம்மா ஆதரவு காங்கிரஸ், பாஜக, ஐக்கிய ஜனதாதள (வேற யாரு தேவெ கெளடாதான்) தலைவர்கள் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தனர் அதிமுகவினர். ஆனால் நிலைமை மோசமாகி விட்டது.
கர்நாடகம் அப்பீல் செய்ய முடிவு செய்து விட்டது அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக அதிமுக மேலிடமும், ஏன் ஜெயலலிதாவே கூட சற்று ஜெர்க் ஆகித்தான் இருப்பதாக கூறுகிறார்கள்.
லென்ஸ் வைத்தோ, மைக்ரோஸ்கோப் வைத்தோ, ஸ்கேன் செய்தோ பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.. நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் உள்ள மகா மற்றும் மெகா சைஸ் தவறைக் கண்டுபிடிக்க. கண் தெரியாதவர்கள் கூட பளிச்சென கண்டுபிடித்து விடக் கூடிய அளவில் மொக்கையான தீர்ப்பைக் கொடுத்து விட்டுப் போய் விட்டார் குமாரசாமி.
இதை சுப்ரீம் கோர்ட்டில் போய் கொடுத்து இது தீர்ப்பா என்று கேட்டால் "எந்த" நீதிபதியாக இருந்தாலும், கடும் கோபமாகி உடனே இடைக்கால தடை கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இதுதான் அதிமுக தரப்புக்கு கடும் அதிர்ச்சியாக உள்ளது. டென்ஷன் மோடுக்கு அத்தனை பேரும் மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்று, கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு ஸ்டே கொடுத்து விட்டால், நீதிபதி குமாரசாமியால் குப்பையில் தூக்கி போடப்பட்ட குன்ஹா தீர்ப்பு உயிர் பெற்று விடும். நடைமுறைக்கும் வந்து விடும். தானாகவே ஜெயலலிதாவின் பதவி மறுபடியும் காலியாகி விடும். இதுதான் அதிமுகவினரின் பயத்திற்குக் காரணம்.
இப்போதுதான் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, அங்கப்பிரதட்சனம், மண் சோறு சாப்பிடுதல், அலகு குத்துதல், பாதயாத்திரை, தாடி வளர்த்தல் என சகலவிதமான அக்கப்போரையும் முடித்து விட்டு நார்மல்சிக்கு திரும்பி வருகின்றனர் அதிமுகவினர். கர்நாடக அரசின் அப்பீல் மனுவால் மறுபடியும் இதையெல்லாம் மீண்டும் தொடர வேண்டிய நிலை வருமே என்ற அச்சமும் பல அதிமுகவினருக்கு ஏற்பட்டுள்ளதாம்.
இந்த நிலையில் கர்நாடக அரசின் முடிவால் அதிர்ச்சி அடைந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை கீரனூரை அடுத்த உப்பிலியக்குடி ஊராட்சியை சேர்ந்த கன்னியாப்பட்டி அதிமுக கிளை பொருளாளராக இருந்தவர் ஜெயக்குமார். 45 வயதான இவர் நேற்று மதியம் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஜெயலலிதா மீதான வழக்கில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்ய உள்ள செய்தி வெளியானது. இதை பார்த்ததும் ஜெயக்குமார் கடும் அதிர்ச்சி அடைந்து புலம்பியுள்ளார். பின்னர் அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்து போனார்.
எனவே ஜெயலலிதாவுக்கு மீண்டும் சிக்கல் வந்தால் அதை அதிமுகவினர் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் அதிமுகவினர் பெரும் சோகமடைந்து போய் சோர்வாகிப் போவார்கள் என்பது மட்டும் உறுதி.