அதிமுகவில் சோபிக்காத ஸ்டார் பேச்சாளர்கள்
சென்னை: அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக சோபிக்கும் அளவு பேச்சாளர்கள் இல்லை என்பதால் வேட்பாளர்கள் விரக்தியில் உள்ளனர்.
அதிமுகவில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா செல்லும் பகுதிகளில் மட்டுமே பெரும் கூட்டம் கூடுகின்றதாம். பேச்சாளர்கள் என்று அறிவித்துள்ள நடிகர் ராமராஜனுக்கு மவுசு போய் பல ஆண்டுகள் ஆனதாலும், செந்தில் காமெடி நடிகர் என்பதாலும், பாத்திமா பாபு செய்தி வாசிப்பாளர் என்பதாலும் அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்பார்த்த அளவு கூட்டம் சேரவில்லையாம்.
மேலும் மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேச்சும் சமீப காலமாக அதிமுகவினர் விரும்பும் வகையில் இல்லை என்று கூறப்படுகின்றது. திமுகவில் இருந்து அதிமுக வந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி பேச்சும் பெரிய அளவில் எடுபடவில்லையாம்.
இதனால் ஜெயலலிதாவை மட்டுமே அதிமுக வேட்பாளர்கள் நம்பி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது திரைத்துறையில் முன்னணியில் உள்ள நடிகர், நடிகைகள் யாராவது வந்து தேர்தல் பிரச்சாரம் செய்தால் நன்றாக இருக்கும் என அதிமுக வேட்பாளர்கள் அழுகாதகுறையாக சொல்கின்றனர். ஆனால், இதை அவர்கள் கட்சி பொதுச் செயலாளரிடம் யார் சொல்லவது என்பது தான் பிரச்சனையாம்.