அதிமுக தொண்டர்களே! காங்கிரஸுக்கு வாங்க... வாங்க - கூவி அழைக்கும் திருநாவுக்கரசர்!
அதிமுகவில் அதிருப்தியுடன் இருக்கும் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவில் அதிருப்தியுடன் இருக்கும் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலையில், அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ டேனியல் ராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜி.அனந்தகுமார், எஸ். கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
அதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறும்போது, தமிழகம் முழுவதும் அதிருப்தியில் இருக்கிற அதிமுக தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியில் வந்து இணையலாம்.
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, இவ்வாறு நாங்கள் திறந்த அழைப்பு விடுக்காததற்குக் காரணம், அதிமுகவின் பிளவுபட்ட அணிகள் ஒன்றிணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த முயற்சியை கலைக்கும் வண்ணம் எங்கள் அழைப்பு இருந்துவிடக் கூடாது என்பதால் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை.
ஆனால், அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே அதிருப்தியில் இருக்கும் அதிமுக தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். திருநாவுக்கரசரும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.