ஜெ. படத்தால் திண்டுக்கல் மாநகராட்சியில் திமுக- அதிமுக கவுன்சிலர்கள் அடிதடி, நாற்காலிகள் வீச்சு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். முன்னால் முதல்வர் ஜெயலலிதா படத்தை அகற்றும் பிரச்சனையில் 2 கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைதண்டனையும், நூறு கோடி அபராதமும் விதிக்கப்பட்டதை அடுத்து அவரது முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. எம்.எல்.ஏ பதவியையும் அவர் இழந்தார்.
தற்போது தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம்தான் அரசு அலுவலகங்களிலும், மாநகராட்சி அலுவலகங்களிலும் உள்ளது.
இதற்கு தேமுதிக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. புகைப்படத்தை அகற்றக் கோரி பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் படத்தை அகற்ற திமுகவினர் முயன்றனர். அப்போது படத்தை அகற்ற அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. திமுக, அதிமுக உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் நாற்காலிகளை வீசியும், மைக்குகளை பிடுங்கி எறிந்தும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த இடமே கலவர பூமியாக மாறியது.
செய்தியாளர்களிடம் பேசிய திமுகவினர், ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற குற்றவாளியின் படத்தை வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இதேபோல ஜெயலலிதாவின் போட்டோவை அகற்றும் விவகாரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் நகராட்சியில் திமுக, அதிமுக கவுன்சிலர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.