ஜல்லிகட்டு போட்டி தடைக்கு தமிழக அரசே முழுக்காரணம்: கனிமொழி
சென்னை: ஜல்லிகட்டு போட்டி தடைக்கு தமிழக அரசே காரணமாகும். போட்டி நடத்த வகுக்கப்பட்டிருந்த விதிமுறையை மீறியதால் தான் நீதிமன்றம் அதற்குத் தடை விதித்தது எனத் திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக மகளிரணி சார்பில் ஆர்.கே.நகர் சிவாஜி நகரில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதனை மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சுதர்சனம், ஆர்.டி.சேகர், சற்குண பாண்டியன், இளைய அருணா, மணி, சிம்லா முத்துசோழன், திராவிட செல்வி பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

திமுக தேர்தல் அறிக்கை...
திமுக தேர்தல் அறிக்கை 75 சதவீத பணிகள் முழுமை அடைந்துள்ளன. மக்களின் அடிப்படை பிரச்சினைகள் ஆராயப்பட்டு அதற்கு தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். திமுக தேர்தல் அறிக்கை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

ஜல்லிக்கட்டு தடை...
ஜல்லிகட்டு போட்டி தடைக்கு தமிழக அரசே காரணமாகும். போட்டி நடத்த வகுக்கப்பட்டிருந்த விதிமுறையை மீறியதால் தான் கோர்ட்டு தடை விதித்தது. எனவே இதற்கு முழுக் காரணம் அ.தி.மு.க. அரசுதான்.

திமுக போராட்டம்...
தற்போது ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும் உறுதி அளித்ததை தொடர்ந்து திமுக நடத்த இருந்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இதில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காவிட்டால் திமுக களத்தில் இறங்கி போராடும்.

வெள்ள நிவாரணம்...
வெள்ள பாதிப்பு பகுதிகளில் மக்களுக்கு உரிய முறையில் நிவாரணம் சென்றடையவில்லை. வெள்ள நிவாரணத்துக்கு ஏற்கனவே வந்த நிதி முறையாக பயன்படுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. இது குறித்து முழுமையான விவர அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications