இரட்டை இலை கிடைச்சும் பயனில்லாம போயிடுமோ... அதிமுகவிற்கு 'பிரஷர்' ஏற்றும் ரிப்போர்ட்கள்!
Recommended Video
சென்னை : அதிமுக தாங்கள் தான் என்பதன் அடையாளமே இரட்டை இலை சின்னம் என்று தற்போதைய நிர்வாகிகள் மார்தட்டிக் கொள்ளும் நிலையில், அந்த சின்னம் கிடைத்த பலன் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தை அதிமுகவினருக்கு கருத்துக்கணிப்பு முடிவுகளும் உளவுத்துறை ரிப்போர்ட்களும் தருகின்றன.
அதிமுகவில் இருந்து சசிகலாவையும், தினகரனையும் ஒழிக்க வேண்டும் என்பதில் வெற்றி கண்டுள்ளார்கள் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும். என்ன தான் வழக்கு போட்டாலும், தேர்தல் ஆணையத்திடம் இருந்து சின்னத்தையும் கட்சியின் பெயரையையும் பெற்று வந்துவிட்டார்கள்.
ஆனால் இத்தனை ஆண்டுகள் கட்டி காக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்திற்கான பெருமைகள் இனியும் கட்டிக்காக்கப்படுமா என்பது தான் தற்போதுள்ள மிகப்பெரிய கேள்வி. ஏனெனில் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற மக்கள் பிரபலமான தலைவர் இல்லாததே இதற்கு குறையாக இருக்கிறது. இந்நிலையில் அதிமுக சின்னமும், கட்சிப் பெயரும் கிடைத்த சந்தோஷத்தோடு ஆர்கே நகர் தேர்தல் களம் இறங்கியுள்ளவர்களுக்கு அதன் பெருமையை தக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
மக்கள் சந்தேகம்
ஆர்கே நகர் தேர்தல் களத்தில் ஆளும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்திய விஷயமாக பார்க்கப்படுவது ஓகி புயலின் போது முறையான நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது. குமரி மாவட்ட மக்கள் போல தாங்களும் தமிழகத்தின் எல்லையோர மக்கள், கடல் எல்லையை ஒட்டியுள்ள மக்கள் நாளைக்கு தங்களுக்கும் இதே போன்றதொரு நிலை ஏற்பட்டால் அரசின் செயல்பாடு இப்படித் தான் இருக்குமா என்பது ஆர்கே நகர் தொகுதி மக்களின் கேள்வியாக உள்ளது.
தினகரனுக்கு பெருகும் ஆதரவு
இதனிடையே கட்சி, சின்னம் எதுவும் இன்றி சுயேச்சையாக போட்டியிடும் தினகரன் அதிமுகவிற்கு சவாலாக இருந்து வருகிறார். இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டாலும் வெற்றி பெறுவேன் என்று களமிறங்கியிருக்கும் தினகரனுக்கு மக்கள் ஆதரவு இருப்பதாகவே உளவுத்துறை ரிப்போர்டும் தரப்பட்டுள்ளது.
எந்த அடிப்படையில்
இது மட்டுமல்ல லயோலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பிலும் தினகரனுக்கு செல்வாக்கு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. ஆனால் எந்த அடிப்படையில் தினகரனுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது தான் புரியாத புதிராக உள்ளது.
பிரஷரில் அதிமுக
எது எப்படியாயினும் எதிரிகளுக்கு பிரஷர் ஏற்றவே பிரஷர் குக்கர் என்று சொன்ன தினகரனின் வாக்கு உண்மையாகிவிடுமோ என்று கலக்கத்தில் உள்ளனர் கட்சியினர். அதற்கு ஏற்றாற்போல அனைத்து நிலைமைகளும் தினகரனுக்கு சாதகமாகவே இருப்பதால் அதிமுகவினருக்கு மேலும் மேலும் பிரஷர் ஏறிக்கொண்டு தான் இருக்கிறது. கஷ்டப்பட்டு போராடி கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பெற்றதற்கான பலன் இல்லாமல் போய்விடுமோ என்று நெருக்கடியான நிலையில் உள்ளனர் அதிமுகவினர்.