அதிமுகன்னாவே சசிகலா அணி மட்டுமே.. ஒரு கோஷ்டியும் கிடையாது.. போட்டு தாக்கும் ஜெயானந்த்
அதிமுக இப்போதும் சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதிமுகவில் கோஷ்டிகளே இல்லை என்று திவாகரனின் மகன் ஜெயானந்த் தெரிவித்தார்.
சென்னை: அதிமுக இப்போதும் சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. சசிகலாவை யாரும் கட்சியிலிருந்து தூக்கவில்லை என்று ஜெயானந்த் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று பிளவுப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்வர் கனவில் இருந்த சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.
இதைத் தொடர்ந்து அதிமுக இணைப்புக்காக தினகரனையும், சசிகலாவையும் ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் கூறியதை தொடர்ந்து சசிகலா அணி எடப்பாடி அணி என்றே அழைக்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் ஏதேதோ...
தமிழக அரசியலில் அன்றாட பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நிலை இருந்து வருகிறது. இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார். எனினும் தினகரனை ஒதுக்கி வைப்பதாக எடுத்த முடிவு எடுத்ததுதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் தெரிவித்தனர்.
தினகரனுக்கு பெருகும் ஆதரவு
இதைத் தொடர்ந்து தினகரனுக்கு நாள்தோறும் ஆதரவு பெருகி தற்போது 35 எம்எல்ஏ-க்களின் ஆதரவு உள்ளதால் எடப்பாடிக்கு பெரும்பான்மை பலத்தை இழக்க வாய்ப்பு ஏற்பட்டது. தற்போது அதிமுகவில் மூன்று கோஷ்டிகள் உள்ளன. இது குறித்து சசிகலாவின் தம்பியான திவாகரனின் மகன் ஜெயானந்த் இந்தியா டுடே இதழுக்கு பேட்டி அளித்தார்.
அஞ்சா நெஞ்சர் சசிகலா
அப்போது அவர் கூறுகையில் எனது அத்தை சசிகலா எதற்கு அஞ்சாதவர். எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல் அவருக்கு உண்டு. அவர் சிறையில் இருந்தாலும் அதிமுகவை வழிநடத்தக் கூடிய தகுதி அவருக்கே உள்ளது.
கோஷ்டிகள் இல்லை
அதிமுகவில் சசிகலா அணி என்பது மட்டுமே உள்ளது. ஊடகங்கள் சொல்வது போல் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என்பதெல்லாம் இல்லை. தினகரனை 35 எம்எல்ஏ-க்கள் சந்திப்பதை கோஷ்டியாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. இரு அணிகளும் இணையத்தான் சசிகலாவின் பேனர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்டது.
தூக்கி எறியவில்லை
சசிகலாவை கட்சியிலிருந்து யாரும் தூக்கி எறியவில்லை. தற்போதைய சூழலில் அதிமுக இணைப்பு என்பது சாத்தியமில்லை. அகற்றப்பட்ட பேனர்கள் மீண்டும் அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்படும். ஜெயலலிதா மறைந்த பின்னர்தான் நில அபகரிப்பு புகார் தொடர்பாக அனைவரும் எதிர்மறையாக பேசுகின்றனர்.
சொத்துகள் குறித்து சசி
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது நில அபகரிப்பு புகார்களை ஏன் கூறவில்லை என்பது இதுவரை புரியவில்லை. ஜெ. சொத்துகள் தொடர்பாக சிறையில் இருந்து வெளியேவந்த பின்னர் அத்தை சசிகலா பேசுவார் என்றார் அவர்.