கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் ஸ்ரீரங்கத்தில் இறக்கும் அதிமுக... அசந்து நிற்கும் திமுக!
சென்னை: போடுங்கம்மா ஓட்டு... நம்ம சின்னத்தைப் பார்த்து... என்று கையில் பதாகை ஏந்தி வாக்கு கேட்டு போனால் ஒரு சுற்று சுற்றி முடித்த பின்னர் டீ கடையில் வடையும் டீயும் வாங்கித்தருவார்கள்.
வேட்பாளர் வசதியாக இருந்தால் டொரீனோ கலரோ, பவன்டோ கலரோ கிடைக்கும்.
அந்தக்காலமெல்லாம் மலையேறிப் போச்சு... தலைக்கு 300 ரூபா பிரியாணி பொட்டலம் கொடுத்தால் வர்றோம்... இல்லையா வேற ஆளைப் பார் என்கிற காலம் வந்துவிட்டது.
ஆனாலும் அசராமல் ‘கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் பயன்படுத்தி' ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு ஆள் பிடித்து அசத்துகின்றனர் அதிமுகவினர்.
விட்டுருவோமா நாங்க
பொதுத்தேர்தலுக்கே கரன்சி கை மாறும். இடைத்தேர்தல் என்றால் சும்மாவா? சிவப்பு நோட்டுக்களாய் பறக்கின்றன. அம்மா தொகுதியாச்சே விட்டுருவோமா நாங்க... என்று காலரை தூக்கிவிட்டுக்கொண்டு அதிமுகவினர் கொடுக்கும் அலப்பறையால் அலறித்தான் போயிருக்கிறது திமுகவின் பாசறை.
எத்தனை கோடி செலவு
''ஏற்காடு இடைத்தேர்தல்லயே 198 கோடி செலவு பண்ணினோம். இது அம்மா தொகுதி. எவ்வளவு பண்ணுவோம்னு எங்களுக்கே தெரியாது'' என திமுகவினர் காதில் படும்வகையில் பேசி வயிற்றில் புளியை கரைத்து கிலியை ஏற்படுத்துகின்றனராம் அதிமுகவினர்.
மணல் லாரியில வந்துருச்சிப்பா
கார்ல பணத்தைக் கொண்டுவந்தாதானே செக்கிங் பண்ணுவாங்க. ஆந்திரா, கர்நாடகானு வெளி மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளிலும், மணல் லோடு லாரி மூலமாகவும் பணம் ஸ்ரீரங்கம் தொகுதியில் இறங்கியுள்ளதாம். எனவே இப்போதிருந்தே தவணை முறையில் கொடுக்கத் தொடங்கிவிட்டார்களாம்.
சென்டிமென்ட் டச்
வீதிகள் தோறும் வீடு வீடாய் வாக்கு சேகரிக்க போகும் அதிமுகவினர் சென்டிமென்ட் டச் வைக்கத் தவறுவதில்லையாம். கொஞ்சம் தண்ணி கொடுங்களேன் என்று பிட் போட்டு பேசி... பசங்க நல்லா படிக்கிறாங்களா என்று பாச வலை வீசி நாடி பிடித்து பார்க்கின்றனராம்.
என்ன சிக்னல்
ஆகா வலைக்கு மீன் சிக்கிருச்சி... என்ற நம்பிக்கை உண்டானதும் விசிட்டிங் கார்டைக் கொடுத்து, அழுத்திவிட்டு எதுவானாலும் எனக்குக் கூப்பிடுங்க' என்று சொல்லிவிட்டு போகின்றனராம். இதுதான் கட்சிக்காரர்கள் கொடுக்கும் சிக்னல் என்கின்றனர்.
கை மாறும் பணம்
கரை வேட்டிகள் மறைந்த பின்னர், கெடுபிடிகள் சற்று ஓய்ந்த நேரம் பார்த்து வீட்டின் கதவை தட்டும் இளைஞர் அணியினர், ஆயிரம் ரூபாய் நோட்டினை அழுத்தி இப்போ செலவுக்கு வச்சுக்கங்க. மிச்சம் தவணையில வரும், ஓட்டு போடும் போது நினைவுல வச்சுக்கங்க என்று வேண்டுகோள் விடுக்கின்றனராம்.
முதல்வர் மகன்
இதுவரை நடந்த இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க பணிக் குழுவுக்கு ஓ.பன்னீர் செல்வம்தான் தலைவராக இருப்பார். இப்போது அவர் தமிழ்நாட்டின் முதல்வர் என்பதால் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அவருடைய மகன் ரவீந்தரநாத் குமார் தலைமையில் அணி அமைத்திருக்கிறார்கள். கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் கொட்டி வாக்காளர்களை கவரத் தொடங்கிவிட்டனர் அதிமுகவினர்.
சுதாரித்த திமுக
முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்தாலும் ‘அம்மா தொகுதி' என்று திமுகவினர் அசால்டாகவே இருந்துள்ளனர். பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு வந்து முடுக்கிவிட்ட பின்னரே சுதாரிக்க ஆரம்பித்துள்ளனராம்.
எடைத்தேர்தல்
'இது இடைத்தேர்தல் இல்லை. இந்த ஆட்சியை எடைபோடும் தேர்தல்' என ரைமிங் டைமிங்காகப் பேசி உசுப்பேற்றிவருகிறார் திருச்சி சிவா.
பெருமாளுக்கே பொறுக்கலையே
'கருணாநிதி சதி பண்ணி அம்மா பதவியைப் பறிச்சுட்டார்' என்று அதிமுகவினர் தாய்குலங்களிடம் பிரசாரம் செய்கின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 'அந்த அம்மா அநியாயமா ஊழல் பண்ணிருச்சு. அது அந்த ஸ்ரீரங்கம் பெருமாளுக்கே பொறுக்கலை. அதான் பதவியைப் பறிச்சுட்டார்' என அசத்துகின்றனர் திமுகவினர்.
பாஜக, கம்யூனிஸ்ட்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுகவினர் அசுரவேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். திமுகவினர் இப்போதுதான் சுதாரிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு செய்வதறியாது விழித்துக் கொண்டிருக்கின்றனராம்.