கிராம மக்கள் முற்றுகை.. கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் !
கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.
சென்னை: கூவத்தூரில் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் ரிசார்ட்டில் தங்கியுள்ள சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் அவசர அவசரமாக கார்கள் மூலம் வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவை கைப்பற்றிய சசிகலா, ஆட்சியையும் கைப்பற்றி முதல்வராகியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் காய் நகர்த்தி வருகிறார். இதற்கு கட்சி தொண்டர்கள், பொது மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆனால் எதை பற்றியும் கவலைப்படாத சசிகலா கோஷ்டியினர் அதிமுக எம்எல்ஏக்களை சொகுசுப் பேருந்தில் வைத்து கடத்திச் சென்றனர். மாமல்லபுரம் அருகே உள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் 2 நாட்களாக அடைத்து வைத்துள்ளனர்.
எம்எல்ஏக்கள் மற்றவர்களை சந்திக்கவும், தொலைபேசியில் பேசவும் மன்னார்குடி கும்பல் தடை விதித்துள்ளது. எம்எல்ஏக்களை கண்காணிக்க மன்னார்குடியில் இருந்து அந்த கும்பல் அடியாட்களை இறக்கியுள்ளது. எந்த வித தகவல் தொடர்பும் இன்றி எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான சகல வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
ரிசார்ட் பகுதி வழியாக அன்றாடப் பணிக்கு செல்லும் மக்களைக் கூட அந்த பகுதியில் விடாமல் மன்னார்குடியில் இருந்து குவிந்துள்ள அடியாட்கள் தடுத்து அவர்களை அடித்து விரட்டி வருகின்றனர்.
இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களை முற்றுகையிட்டனர். எம்.எல்.ஏ.,க்களை விடுதியிலிருந்து வெளியேற கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து கார்கள் மூலம் அவசர அவசரமாக எம்எல்ஏக்கள் வெளியேறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications