"ஆத்தா" ஆடு கொடுத்துச்சு, மாடு கொடுத்துச்சு, நம்மளையும் வளர்த்துச்சு.. ஆனா.. கூவத்தூர் கீதம்!
கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்சில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: சசிகலா ஆதரவாளர்களாக கருதப்படும் அதிமுக எம்.எல்.ஏக்களின் புலம்பல்கள் தற்போது கூவத்தூரையும் தாண்டி கூவம் குடி கொண்டுள்ள சென்னையை அலறடித்துக் கொண்டுள்ளது.
ஆரம்பத்தில் உள்ளே வந்தவர்களுக்கு ஜாலியாகத்தான் இருந்ததாம். ஜாலியானதாகத்தான் இருந்ததாம்.. அட ஜாலியாத்தான் இருந்தாங்களாம். ஆனால் போகப் போகத்தான் புலம்ப ஆரம்பித்து விட்டார்களாம்.
எல்லாம் தர்றாங்க, சந்தோஷமா பார்த்துக்கிறாங்க, ஆனா போனை கண்ணில் கூட காட்ட மாட்டேங்கிறாங்க. ஜெயில்ல கூட போனில் ஈசியா பேச முடியுது. ஆனா இங்க முடியலையே என்பதுதான் பலருடைய பெரும் புலம்பலாக உள்ளதாம்.
பஸ்ஸைப் புடி.. பார்சல் கட்டு
சென்னை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தைத் தொடர்ந்து பஸ்களை அமர்த்தி பார்சல் ஏற்றுவது போல அதிமுக எம்.எல்.ஏக்களை கொண்டு சென்றனர் அதிமுகவினர். அதன் பிறகு அவர்களை யாருமே எங்கேயும் பார்க்க முடியவில்லை. அவர்களை அடைத்து வைத்திருப்பதாகவும், கடத்திக் கொண்டு போய் விட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் கிளம்பின. ஏன் வழக்குகளும் கூட கோர்ட்டுகளில் பதிவாகின.
நல்லாதான் இருக்காங்க பாஸ்
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் இன்று பிற்பகல் சில எம்.எல்.ஏக்களை மட்டும் கூட்டிக் கொண்டு வந்து அவர்களை பேச வைத்து..(நல்லா கவனிங்க).. பேச வைத்து விட்டு பின்னர் கூட்டிக் கொண்டு போய் விட்டனர். தற்போது மீண்டும் மர்மம் தொடர்கிறது. தற்போது அவர்கள் தங்கியுள்ள கோல்டன் பே ரிசார்ட்ஸுக்குள் என்ன நடக்கிறது, என்ன நடந்தது என்பது குறித்து ஏகப்பட்ட சமாச்சாரங்கள் வெளியே வந்து கொண்டுள்ளன.
என்னய்யா இது அக்கிரமமா இருக்கு
உள்ளே போனதும் முதல் வேலையாக அனைவரிடமிருந்தும் செல்போன்களை வாங்கிக் கொண்டு விட்டனராம். டிவியும் கிடையாது. நியூஸும் பார்க்க முடியாது. ஜாமர் கருவியும் பொருத்தப்பட்டது. எனவே தப்பித் தவறி கூட போன் பண்ண முடியவில்லை. எஸ்எம்எஸ் கூட அனுப்ப முடியவில்லை. வாட்ஸ் ஆப் கிடையாது. எதுவும் கிடையாது. இது அனைவரையும் அதிர வைத்து விட்டதாம்.
கவலைப்படாதீங்கப்பா
இதையடுத்து நேற்று கிட்டத்தட்ட அத்தனை பேரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்களுக்கு முதலில் போனைக் கொடுங்க. குடும்பத்தினருடன் பேச வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு அங்கு வந்த அமைச்சர்கள் சிலர், போனைத் தர முடியாது. உங்க குடும்பத்தைப் பத்திக் கவலைப்படாதீங்க. எல்லோருக்கும் உரிய தகவலை நமது ஆட்கள் சரியாக கொண்டு சேர்ப்பித்து வருகிறார்கள். அமைதியாக இருங்கள் என்று சமாளித்துள்ளனர்.
ஜெயிலை விட மோசமா இருக்கேய்யா
ஆனால் அதை ஏற்காத பல எம்.எல்.ஏக்கள், ஜெயிலில் கூட செல்போனில் பேச அனுமதி கிடைக்கிறது. வீட்டுக்குப் பேசவும் முடிகிறது. கைதிகளுக்கே அந்த வசதி கிடைக்கும்போது எங்களுக்கு இல்லையா. அந்த அளவுக்கா மோசமாகி விட்டது எங்க நிலைமை. எங்க மேல நம்பிக்கை இல்லையா என்று கோபமாக கேட்டுள்ளனர். அதற்கு செல்லூர் ராஜுவும், சி.வி.ராஜேந்திரனும் சிரித்தே சமாளித்தார்களாம்.
"அம்மா" ஞாபகம்
பலருக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு வந்து விட்டதாம். அம்மா காலத்தில் கூட நாம் இவ்வளவு கஷ்டப்பட்டதில்லை. இப்போது இவ்வளவு சிரமப்படுகிறோமே என்று புலம்பினார்களாம். இன்னும் என்னென்ன அக்கப்போரெல்லாம் உள்ளே நடந்துச்சோ, தெரியலையே!