வந்த மாட்டையும் கட்டல.. போன மாட்டையும் தேடல... கூட்டுக் குழு உறுப்பினர் பதவியை கோட்டை விட்ட அதிமுக
சென்னை: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆராய்வதற்வாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் உறுப்பினராவதற்கு இருந்த வாய்ப்பை கோட்டைவிட்டு சும்மா இருக்கின்றனர் அதிமுக எம்பிகள்..
நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் பல்வேறு மசோதாக்கள் குறித்து ஆராயவும் அது குறித்த சந்தேகங்களை எழுப்பவும், பரிந்துரைகளை அளிக்கவும் நிலைக்குழு, தேர்வுக்குழு, கூட்டுக் குழு என பலவேறு ஆய்வுக் குழுக்களை நாடாளுமன்ற சபாநாயகர் அமைப்பது வாடிக்கை.
இதில் மிக முக்கியமானது கூட்டுக்குழு. இதில் இடம் பிடிக்க எம்பிக்கள் போட்டிப் போடுவார்கள். மக்களவையில் இருந்து 20 பேரும் மாநிலங்களவையில் இருந்து 10 பேரும் இந்தக் குழுவில் இடம் பெறுவது வழக்கம். கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப இக்குழுவில் உறுப்பினர்களுக்கு இடம் உண்டு.
இந்நிலையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டம் ஒன்றை தீட்டியிருந்தது. அது குறித்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த மசோதா மாநிலங்களவைக்கு வந்த போது எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தால் கூட்டுக் குழுவிற்கு அனுப்பட்டது. இந்தக் கூட்டுக் குழுவில் மாநிலங்களவையில் இருந்து 10 எம்பிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த 10 பேரில் ஒரு அதிமுக எம்பியும் இடம் பெறவில்லை என்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த குடியுரிமை சட்டத் திருத்த மாசோதாவின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மிக முக்கிய பிரச்சனை இலங்கை தமிழர்கள் பிரச்சனை. இரண்டு தலைமுறைகளாக தமிழகத்தில் வசித்து வரும் இலங்கை அகதிகள் இன்னும் குடியுரிமை அற்றவர்களாகவே எந்த உரிமையும் இல்லாமல் வாழ்கின்றனர். அவர்களின் கல்வி, எதிர்காலம் உள்ளிட்ட அனைத்தும் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், அவர்களின் குடியுரிமை பற்றி எடுத்துப் பேசவும், பரிந்துரைக்கவும் அதிமுகவிற்கு கூடுதல் பலமும் வாய்ப்பும் பொறுப்பும் உள்ளது. ஆனால் இந்த கூட்டுக் குழுவில் அதிமுக இடம் பெறாமல் போனது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
பொறுப்புகள் கூட இருந்து ஏன் இந்தக் கூட்டுக் குழுவில் அதிமுகவினர் உறுப்பினராகவில்லை என்று விசாரித்த போது, மக்களவையில் இருந்து அதிமுக சார்பில் வேணுகோபால் எம்பி இடம் பெற்றிருப்பதால் மாநிலங்களவையில் இருந்து யாரும் இடம் பெறவில்லை என்று தகவல் தெரிவிக்கின்றன.
பலமில்லாத கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி போன்றவை கூட தங்களுக்கான இடங்களை கேட்டுப் பெற்றுள்ள நிலையில், பெரிய கட்சியான அதிமுக கூட்டுக் குழுவில் இடம் பெற ஏன் எதுவும் செய்யவில்லை என்ற பின்னணி குறித்து கேள்வி எழுந்துள்ளது.