அதிமுகவில் தேர்தல் திருவிழா இன்று தொடக்கம்... "சீட்" வாங்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
சென்னை: அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனுக்களை அளிக்கவுள்ளனர். இதையொட்டி அதிமுக தொண்டர்கள் சென்னையில் குவிந்து வருகின்றனர். அதிமுக தலைமைக் கழகத்தில் விருப்ப மனுக்கள் பெற சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் இன்று முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம்.
இன்று தொடங்கி
அதிமுக தலைமை கழகத்தில் 20ம் தேதி முதல் 3ம் தேதி வரை தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கட்டண தொகையை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கலாம்.
தமிழ்நாட்டுக்கு ரூ. 11,000
தமிழக சட்டசபைத் தொகுதிகளுக்கு சீட் கேட்டு விண்ணப்பிப்போர், விண்ணப்பத்துடன் ரூ.11 ஆயிரம் செலுத்தி விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.
புதுச்சேரி ரூ. 5000 - கேரளா ரூ. 2000
புதுச்சேரி தொகுதிகளுக்கு ரூ.5000 மற்றும் கேரள சட்டசபைத் தொகுதிகளுக்கு ரூ. 2000 கட்டி விண்ணப்பிக்கலாம் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சிறப்பு ஏற்பாடுகள்
விண்ணப்ப மனுக்களை தர வருவோர் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
"அம்மா"வுக்கு ஒன்னு.. எனக்கு ஒன்னு!
வழக்கமாக விருப்ப மனு தரும்போது முக்கியஸ்தர்கள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சீட் கேட்டுத்தான் அதிக அளவில் மனுக்கள் தருவார்கள். கூடவே தங்களுக்கும் சீட் கேட்டு ஒரு மனுவை நீட்டுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.