திமுக பிளான் பனால்... சின்னத்தை வெச்சு ஒன்னுகூடும் அதிமுக 'மாயாண்டி குடும்பத்தார்'
அதிமுகவை உடைத்துவிடலாம் என்ற திமுகவின் ரகசிய திட்டத்தை தவிடுபொடியாக்கி இரட்டை இலை சின்னம் பிரிந்த கோஷ்டியை ஒன்று சேர்த்துள்ளது.
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எதிர்க்கட்சிகளின் சதிகளை மீறி பிரிந்து போனவர்களை ஒன்று சேர வைத்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவையடுத்து அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்தித்தது. ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலாஅணி என இரண்டு அணிகளும் கட்சியின் பெயருக்கும், இரட்டை இலை சின்னத்துக்கும் உரிமை கோரியதால் அவற்றை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டை போட்டது.
எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் என தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு கிடைக்காவிட்டால் அது திமுவிற்கு சாதகமான விஷயம் என்று அந்தக் கட்சிக் கருதுகிறதாம்.
சின்னம் இல்லாவிட்டால் வெற்றி
மாநிலம் முழுவதும் திமுக நடத்திய ரகசிய ஆய்வில் இரட்டை இலை சின்னம் கிடைக்காவிடில் அதிமுகவிற்கு வாக்குகள் கிடைக்காது என்றும் உள்ளாட்சித் தேர்தலிலும் இதே நிலை ஏற்பட்டால், திமுகவிற்கு அதிக வெற்றி கிடைக்கும் என்று ரிசல்ட் வந்துள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு
இதனால் குஷியான திமுக எப்படியும் உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கத்திலேயே தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மூலம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும் சசிகலா அணியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்களுடனும் திமுக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
திமுகவின் கணக்கு
ஒரு வேளை எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துவிட்டால் ஆட்சி கவிழ்ந்து உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் அப்போதும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடாத சூழல் ஏற்பட்டால் திமுகவின் வெற்றி நிச்சயம் என்று கணக்கு போடுகிறதாம் தலைமை.
முந்திக்கொண்ட பாஜக
தேர்தலில், காங், - வி.சி., - கம்யூனிஸ்ட் கட்சி களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், தி.மு.க, 200 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக, 2019 லோக்சபா தேர்தலிலும், தமிழகத்தில், தி.மு.க., கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும். இந்த விபரத்தை, தெரிந்து கொண்ட பா.ஜ.க மேலிடம் ஆட்சி மாற்றத்தை விரும்பாமல் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி விட்டு, அ.தி.மு.க., அணிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவதன் தொடர்ச்சியாகவே அதிமுக தரப்பில் தற்போது அரங்கேறி வரும் மாற்றங்கள் என்று கூறப்படுகிறது.
சுதாரித்த கோஷ்டிகள்
எனவே ஓ.பன்னீர்செல்வம் அணி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணி என இரண்டு கோஷ்டியையும் தற்போது திமுக விமர்சிப்பதற்கான காரணமே அதிமுக ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதாகவே உள்ளதாம்.
இந்த உண்மைகளெல்லாம் லேட்டாக புரிந்து கொண்ட இரு கோஷ்டியும் சுதாரித்துக் கொண்டதன் விளைவாகவே தற்போது நாங்கள் எல்லாம் அண்ணன், தம்பிகள் என்று வானத்தை போல ஸ்டைலில் "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை" பாடி ஒன்று சேர திட்டமிட்டு வருகின்றனர்.