அதிமுக ஜெயித்தால் 'கபாலி' ப்ரீ ஷோ: நெல்லை ரஜினி ரசிகர்கள் அறிவிப்பு
நெல்லை: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றால் ரஜினிகாந்த் நடித்து வெளியாக உள்ள கபாலி படத்தை ரசிகர்களும், பொதுமக்கள் இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்வோம் என்று நெல்லை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகர, மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற தலைவராக இருப்பவர் தளபதி முருகன். திருநெல்வேலி சந்திப்பு, சிந்துபூந்துறையைச் சேர்ந்த இவர், நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், இவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை சந்தித்து, அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தளபதி முருகன் சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. ரசிகர்கள் அனைவரும் அவரவர் விருப்பப்படி முடிவு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.
எனவே, நான் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட முடிவு செய்தேன். ஆனால், உறுதிமொழி ஆவணப் பத்திரம் தாக்கல் செய்யாததால் மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. எனவே, இந்த தொகுதியில் வேட்பாளர்களில் நல்லவரை தேர்ந்தெடுத்து, அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய திருநெல்வேலி மாவட்ட ரஜினி மன்றம் முடிவு செய்துள்ளது என்றார்.
இங்கு அனைவராலும் எளிதில் அணுகக் கூடிய நபராக உள்ள அ.தி.மு.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள 50 ஆயிரம் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து, வெற்றி பெறச் செய்வார்கள்.
மேலும், இந்த தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றால் நடிகர் ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளிவர உள்ள கபாலி திரைப்படத்தின் முதல் காட்சி திருநெல்வேலி திரையரங்கில் ரசிகர்களுக்கு இலவசமாக காண்பிக்கப்படும். அடுத்த காட்சி பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக காண்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.