கேரள மருத்துவமனையில் அடையாளம் காண முடியாத நிலையில் 40 உடல்கள்.. கன்னியாகுமரி மீனவர்களா என சந்தேகம்!
ஓகி புயலுக்குப் பிறகு கேரள கடலில் மிதந்தது, கரை ஒதுங்கியது என 40 உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: ஓகி புயலுக்குப் பிறகு கேரள கடலில் மிதந்தது, கரை ஒதுங்கியது என 40 உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கடந்த 30ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவை நெருங்கியது. இதில் இரு மாநிலங்களும் பலத்த சேதத்தை சந்தித்தன.
இந்நிலையில் புயலுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலர் இதுவரை கரை திரும்பவில்லை. இதனால் அவர்களின் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
433 மீனவர்கள் மாயம்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட பட்டியலில் 433 மீனவர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில் உள்ளனர். இதில் 37 பேர் நாட்டுப்படகு மீனவர்கள், 398 பேர் விசைப்படகு மீனவர்கள் ஆவர்.
உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு
கிராமங்கள் வாரியாக நீரோடி 39, மார்த்தாண்டம் துறை 11, வள்ளவிளை 223, இரவிபுத்தன்துறை 1, சின்னத்துறை 66, தூத்தூர் 39, பூத்துறை 28, குளச்சல் 13, மிடாலம் 13, பேர் கரை திரும்பவில்லை. இதனால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடலில் மிதக்கும் உடல்கள்
மாவட்ட நிர்வாகம் இதுவரை 2 மீனவர்களை மட்டுமே இறந்தவர்களாக அறிவித்துள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்கள் அங்கு கரை சேர்க்க முடியாத நிலையில் உடல்கள் மிதப்பதாக கூறி வருகின்றனர்.
வெளியான வீடியோக்கள்
இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாயின. ஆனால் இதுகுறித்து அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததுபோல் தெரியவில்லை.
கன்னியாகுமரியை சேர்ந்தவர்களா?
இந்நிலையில் ஓகி புயலுக்குப் பிறகு கடலில் மிதந்தது, கரையொதுங்கியது மற்றும் சக மீனவர்களால் மீட்கப்பட்டது என்று கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 40 உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது. இவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மீனவர்கள் அதிர்ச்சி
இவை அனைத்தும் டிஎன்ஏ பரிசோதனைக்கு பின்னரே உறுதி செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. மீனவர்கள் நிச்சயம் வீடு வந்து சேருவார்கள் என அவர்களது உறவினர்கள் காத்திருக்கும் நிலையில் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.