1000 வாட்ஸ் பல்பு போல் காய்ந்த வானம்- அது காலை... சென்னையில் மீண்டும் கனமழை- இது மாலை!
சென்னை: சென்னையில் காலை முதலே வெயில் காய்ந்த நிலையில் தற்போது பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை கடந்த 30-ஆம் தேதி முதல் சென்னை மக்களை வாட்டி வதைக்கிறது. வாட்டி வதைப்பு என்பதை வெயிலுக்கு சொல்லிய மக்கள் தற்போது மழைக்கும் சொல்லி வருகின்றனர்.
அந்த அளவுக்கு தனித் தீவுகளாக காட்சியளிக்கிறது சென்னையின் பெரும்பாலான பகுதிகள். இன்று காலை முதலே சென்னையில் வெயில் காய்ந்தது. வானிலை ஆய்வு மையமும் நாளை முதல் மழை படிப்படியாக குறையும் என்று அறிவித்தது.
இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட சென்னைவாசிகள் தற்போது அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆம், சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, திருவான்மியூர், சூளைமேடு, ராயப்பேட்டை, கே.கே.நகர், அடையாறு, அசோக் நகர், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.