அதிமுகவிற்கு எதிராக களம் இறங்கிய அகமுடையார் அமைப்புகள்- தேர்தலில் போட்டியிடவும் முடிவு!
மதுரை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக அகமுடையார் அமைப்பு களம் இறங்கியுள்ளது.
தென் மாவட்டங்களில் அதிமுகவை முக்குலத்தோர் சார்பு கட்சி என்றும், திமுகவை தலித் ஆதரவு கட்சி என்ற நிலைப்பாடே நீடித்து வந்தது.
இந்த நிலையில், அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில், கள்ளர் சமூகத்திற்கு, தேனி, திருச்சி, திண்டுக்கல் , தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே போல, மறவர் சமுதாயத்திற்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், முக்குலேத்தோர் அமைப்பில் அகமுடையார் சமுதாயத்திற்கு என ஒரு தொகுதி கூட ஒதுக்கவில்லை என அகமுடையார் அமைப்புகள் அதிமுக மீது குற்றம் சாட்டியுள்ளன.
மேலும், இம்முறை தங்களது வாக்கை தங்களது சமுதாயத்தை சேர்ந்த நபர்களுக்கே வழங்குவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து, மதுரையில் அகமுடையார் எழுச்சி மாநாடு நடத்தினர். மேலும், தென்நாட்டு மக்கள் கட்சி என்ற கட்சியையும் துவக்கியுள்ளனர்.
இந்த நிலையில், அகமுடையார் அதிகம் உள்ள பகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதனால் அதிமுக வேட்பாளர்கள் இது என்னடா புது சோதனை என சோகத்தில் மூழ்கியுள்ளனர்.