ஆறு எம்.எல்.ஏக்கள், அசராத ஆளும் கட்சி... ஸ்டாலினுக்கு செக் வைக்கும் திடீர் வியூகம்
சென்னை: நவம்பர் மாத இறுதியில் கூட இருக்கும் சட்டசபை குளிர்கால கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் கிளம்ப இருக்கின்றன. அதற்குள் ஆட்சிக்கான பெரும்பான்மை பலத்தைப் பெறும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
'எதிர்க்கட்சி வரிசையில் இருந்து ஆறு எம்.எல்.ஏக்கள் இந்த அரசுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர். இதை முறியடிக்கும் வேலைகளில் தி.மு.க நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.
தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏக்களைத் தகுதிநீக்கம் செய்து ஆட்சிக்கான வலுவைக் காட்டிக் கொண்டாலும், சட்டமன்றத்தில் 117 என்ற எண்ணிக்கையைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
பலம் பெற வாய்ப்பு
'18 தொகுதிகளில் தேர்தல் நடந்தால் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும்?' என்ற சந்தேகம், அமைச்சர்கள் பலருக்கும் உள்ளது. இந்தத் தொகுதிகளின் களநிலவரம் குறித்து மாநில அரசின் உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பாக டி.டி.வி.தினகரன் தொடர்ந்திருக்கும் வழக்கும் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிடக் கோரி தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்கும் நிலுவையில் இருக்கின்றன. 'இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்குள் எடப்பாடி போதிய பலம் பெற்றுவிடுவார்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.
எதிர்க்காமல் பதுங்கும் மா.செக்கள்
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகி ஒருவர், " தற்போதுள்ள நிலையில் தேர்தல் வருவதை தி.மு.க எம்.எல்.ஏக்களில் பலரும் விரும்பவில்லை. கடந்த தேர்தலில் செலவு செய்த பணத்தை இன்னும் சம்பாதிக்க முடியவில்லை (சம்பள வருவாய்). இவர்களுடைய தொகுதிகளில் நடக்கும் பணிகளின்போது போக வேண்டிய கணக்கு வழக்குகள் சரியாக போய்க்கொண்டுள்ளன என்று கூறப்படுகிறது. இதனால், மாவட்டங்களில் அமைச்சரை எதிர்த்துப் போராட்டம் செய்ய வேண்டிய எதிர்க்கட்சி மாவட்ட செயலாளர்கள் மௌனம் சாதிக்கின்றனர். இந்தக் கணக்கு வழக்குகளை அறிந்து கடும் கோபத்தில் இருக்கிறார் ஸ்டாலின். தேர்தல் வரும்போது இவர்களை பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறார். ஆளும்கட்சிக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தினாலும், திரைமறைவு அரசியலால் தி.மு.க கூடாரம் அதிர்ந்து போய் இருக்கிறது" என விவரித்தார் அந்த நிர்வாகி.
காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு வலை
" கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏக்கள் முடிவெடுத்தால், அவர்கள் எந்தக் கட்சியிலும் சேரலாம். தற்போது காங்கிரஸ் கட்சியில் 8 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் ஆறு பேரை வளைக்கும் வேலைகள் தீவிரமாகியுள்ளன. இதில் ஐந்து பேர் இந்த அரசுக்கு ஆதரவு தெரிவிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாக ஆளும் கட்சி சீனியர்கள் ஒரு தகவலை சீக்ரெட்டாக கூறி வருகிறார்கள். இன்னும் ஒருவர் வந்துவிட்டால், கட்சித் தாவல் சட்டம் பாயாது. ' அந்த ஒரு எம்.எல்.ஏ கட்டாயம் வருவாரா? எங்கள் மீது எதாவது நடவடிக்கை பாய்ந்துவிடுமா?' என்றெல்லாம் சிலர் கேள்வி எழுப்புவதாக கூறப்படுகிறது.
பலே திட்டம்
இதற்குப் பதில் அளித்த ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள், ' நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆறு மாதமோ ஒரு வருட காலமோகூட ஆகலாம். அப்படியொரு சூழல் வரும்போது மட்டும் எங்களை ஆதரியுங்கள். ஆறு பேர் வருவது உறுதி. அப்படியும் வரவில்லையென்றால், உங்கள் பதவிக்கு ஆபத்து வராத வகையில் முன்னேற்பாடுகளை நாங்கள் செய்துவிடுவோம். இது உங்கள் அரசு. உங்களுக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பிறகு, உங்களைப் பார்த்துக் கொள்கிறோம். இதில், மூன்று பேருக்கு சமுதாய பிரதிநிதித்துவம் அடிப்படையில் அமைச்சர் பதவி வழங்கவும் தயாராக இருக்கிறோம்' என நம்பிக்கையுடன் பேசியுள்ளனர்.
எச்சரிக்கும் திமுக
ஆளும்தரப்பின் அதிரடி நடவடிக்கையை அறிந்து, தி.மு.க தரப்பில் இருந்து காங்கிரஸ் கூடாரத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகின்றனர். ' அதிகாரமும் பணமும் இருப்பதால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை வளைக்கும் வேலைகளை தீவிரப்படுத்துகிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என காங்கிரஸ் தலைவர்களுக்கு அவர்கள் தகவல் சொல்லியிருக்கிறார்கள். அந்த எம்.எல்.ஏக்களோ, ' எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இதற்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை' என அதிரடியாக பதில் அளித்துள்ளனர். குளிர்கால கூட்டத் தொடரை அதிர்ச்சியோடு எதிர்நோக்கியுள்ளனர் எதிர்க்கட்சி நிர்வாகிகள்.