ஆர்கே நகரில் தினகரன் வலையில் கொத்து கொத்தாக சிக்கும் அதிமுக நிர்வாகிகள்... பெரும் பீதியில் கோட்டை
ஆர்கே நகரில் தினகரன் கை ஓங்கியிருப்பதால் அதிமுக தலைவர்கள் பெரும் பீதியில் உள்ளனராம்.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகரில் தினகரன் வலையில் அதிமுக நிர்வாகிகள் கொத்து கொத்தாக சிக்குவதால் கோட்டை வட்டாரம் ரொம்பவே கதிகலங்கி கிடக்கிறதாம்.
வருமானவரித்துறை சோதனை, பறக்கும் படை ஆய்வு என தினகரனை குறிவைத்துக் களமிறங்கியுள்ளது பா.ஜ.க. இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிட்டது டெல்லி போலீஸ்.
இந்த வழக்கில் 21ம் தேதி தினகரன் நேரில் ஆஜராக வேண்டும்' என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைப் பற்றி தனது ஆதரவாளர்களிடம் பேசிய தினகரன், களத்தில் இருந்து என்னை அப்புறப்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இந்தத் தேர்தலில் நம்முடைய செல்வாக்கைக் காட்டியே ஆக வேண்டும். நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற பயத்தில்தான் வருமான வரித்துறையை அனுப்புகிறார்கள். மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் தேர்தலை அணுக வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார்.
பாஜக வியூகம்
ஆனால், இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.கவின் நிலைப்பாடு வேறு மாதிரியானதாக இருக்கிறது. களத்தில் தினகரனின் பிரசாரமே உச்சத்தில் இருக்கிறது. அவர் வெற்றி பெற்றுவிட்டால், இதுநாள் வரையில் சசிகலா குடும்பத்துக்கு எதிராக எடுத்த முயற்சிகளுக்குக் கிடைத்த தோல்வியாகவே அமைந்துவிடும் என நினைக்கிறார்கள். எனவே, மீண்டும் பணப்பட்டுவாடா புகாரைக் காரணம் காட்டி, இடைத்தேர்தலை ரத்து செய்துவிடலாம் என டெல்லிக்குத் தகவல் அனுப்பியுள்ளனர்.
ஆர்கே நகர் ரெய்டு
இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தின் நிலவரம் குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர் டெல்லி பா.ஜ.கவினர். ராயபுரத்தில் உள்ள பாத்திரக்கடையில் குக்கர் விற்பனை குறித்து நடந்த வருமான வரித்துறை ஆய்வை உன்னிப்பாக கவனிக்கிறது ஆளும்கட்சி. தொகுதி முழுக்க தினகரனுக்குப் பெருகும் பொதுமக்கள் ஆதரவை முறியடிக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கரன்ஸி மழை
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், இடைத்தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக ஆர்.கே.நகரில் தனது ஆட்களைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் தினகரன். உள்ளூரில் உள்ள கட்சி ஆட்கள் மூலமாகவே வீடுகள்தோறும் விநியோகம் நடக்கிறது. இதைத் தடுக்கும் நோக்கில் செயல்பட்டால், மற்ற கட்சிகள் மீது மக்கள் கோபத்தைக் காட்டுகிறார்கள். எனவே, முடிந்த அளவுக்கு நாங்களும் பணம் கொடுக்கத் தொடங்கிவிட்டோம். பாகம், வார்டு வாரியாக கரன்ஸி மழை பொழிகிறது.
கடும் எச்சரிக்கைதரும் கோட்டை
இதனால் யாருமே தொழிலுக்குப் போவதில்லை. உள்ளூர் அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் தினகரன் பக்கம் சாய்ந்துவிட்டனர். இதனால் கடும் கோபத்தில் இருக்கிறார் முதல்வர். இதுகுறித்து நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, அம்மா மறைவுக்குப் பிறகு நமது கைகளுக்கு இரட்டை இலை சின்னம் வந்து சேர்ந்திருக்கிறது. நமக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்ட கிடைத்திருக்கும் முக்கியமான வாய்ப்பு இது. இந்தத் தேர்தலில் உள்ளடி வேலைகளில் ஈடுபடுவோர் குறித்து அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்திருக்கிறோம். தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். இதுகுறித்தெல்லாம் ஆர்.கே.நகரில் உள்ள வார்டு பிரதிநிதிகள் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை என்றார் விரிவாக. ஆர்.கே.நகர் வாக்குப் பதிவு நாளில் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக தினகரன் சென்றுவிட்டால், ஆளும்கட்சியை வெற்றி பெற வைக்கும் வேலைகள் வேகமெடுக்கும். தினகரனுக்கு டெபாசிட் கிடைக்காத அளவுக்கு உள்ளடி வேலைகளும் அரங்கேறும் என்கிறார் உள்ளூர் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர். தேர்தலைவிடவும் தினகரனின் நடவடிக்கைகளை உற்று கவனித்து வருகின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள்.