சசிகலா-துணை வேந்தர்கள் சந்திப்பை அரசியலாக்குவதா? ஸ்டாலினுக்கு அதிமுக கண்டனம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுடன், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் சந்திப்பு நடத்தியதை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார். இதை அதிமுக கண்டித்துள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுடன், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் சந்திப்பு நடத்தியதை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார். இதை அதிமுக கண்டித்துள்ளது.
அதிமுக செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
சில துணை வேந்தர்கள் போயஸ் தோட்டத்திற்கு சென்று தமிழக முன்னாள் முதல்வர் (ஜெயலலிதா) மறைவிற்கு அனுதாபம் தெரிவித்ததை தேவையற்ற முறையில் பிரச்சினையாக உருவாக்கப் படுகிறது.
அனுதாபங்களைத் தெரிவிக்க எங்கு செல்ல வேண்டும், யாரிடம் செல்ல வேண்டும்? பிரதமர் மோடியும் இந்திய நாட்டின் எல்லா மாநிலங்களிலும் இருந்து வந்த முதல்வர்களும், மலேசிய நாட்டின் அமைச்சர் உள்பட மறைந்த முதல்வருக்கு இறுதி மரியாதை செலுத்திய பின் தங்கள் அனுதாபங்களை யாரிடம் கூறினார்கள்?
கஷ்டம், நஷ்டம்
யார் அவருக்கு இத்தனை ஆண்டுகளாக கஷ்டங்களிலும், நஷ்டங்களிலும் மற்றும் எல்லா தருணங்களிலும் உறுதுணையாக நின்றார்களோ அந்த சசிகலாவிடம் தங்கள் அனுதாபங்களை தெரிவித்தார்கள்.
துணை வேந்தர்
அதுதான் சரியான முறை என்று அறிந்ததனால் அன்று அமைதி காத்த எதிர்க்கட்சி தலைவர், இன்று துணை வேந்தர்கள் முன்னாள் முதல்வர் வாழ்ந்த இல்லத்திற்குச் சென்று சசிகலாவிடம் அனுதாபங்களைத் தெரிவித்ததை அரசியலாக்குவது அவரது தரத்திற்கும், பண்பிற்கும் கீழான செயல்.
இலவச ஆலோசனை
அதிமுகவின் உட்கட்சி விஷயங்களில் இன்று திமுக மூக்கை நுழைக்கவும், இலவச ஆலோசனைகள் வழங்கவும் முன் வந்திருக்கிறது. அமைச்சர்கள் கட்சியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும், மாநில கவர்னர் எம்.எல்.ஏ.க்களை கட்சியில் எப்படி செயல்பட வேண்டும் என்று உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
அண்ணா பேச்சு
அடுத்த கட்சியின் உள் விஷயங்களில் நுழைவதற்கு முன் தங்கள் நிலையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். முன்பு ஒருமுறை சட்டமன்றத்தில் அண்ணா பேசியது என் நினைவிற்கு வருகிறது. அடுத்த கட்சி விஷயங்களில் கொஞ்சம் கவனமாக விலகி இருக்க வேண்டும். அடுத்த வீட்டிற்குள் எட்டிப்பார்ப்பது, அடுக்களைக்குள் எட்டிப் பார்ப்பது, திரையை விலக்கிப் பார்ப்பது, அந்தப்புரத்துக்குள் எட்டிப்பார்ப்பது ஆபத்தானது. எங்களுக்கும் உங்கள் கட்சி விஷயங்கள் தெரியும் என்று சொன்னார்கள்.
திண்ணை காலியாகும் என காத்திருப்பவர்கள்
அதைத்தான் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். திண்ணை எப்போது காலியாகும் என்று காத்துக் கொண்டிருப்பவர்கள் சிறு குழந்தைபோல் சுட்டித்தனம் செய்யாமல் அடுத்தவர்களின் திண்ணையில் இருந்து விலகி எட்டி நிற்பதே மேலானது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.