ஜெ.வின் கூட்டங்களுக்கு மக்களை கூட்டிவந்து ஆடு-மாடு போல் அடைத்து வைக்கின்றனர்: ஸ்டாலின்
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில், திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். முன்னதாக ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும், ஆர்.எஸ்.பாரதிக்கு ஆதரவாக ஆலந்தூர் பல்லாவரம் ஆகிய இடங்களில் அவர் வாக்குகளை சேரித்தார்.
பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள், இந்த தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒன்றுமே செய்யவில்லை என கூறி வருகிறார். இங்கு போட்டியிடும் ஆர்.எஸ்.பாரதி 4 முறை நகராட்சி தலைவராக இருந்துள்ளார். பாலாறு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், 132 கி.மீக்கு சாலைகள், பழவந்தாங்கல், தில்லை கங்காநகர் சுரங்கப்பாதை, ஆசர்கானா, மீனம்பாக்கம் சுரங்க நடைபாதை போன்றவற்றை இவர் நகராட்சி தலைவராக ஆற்றிய பணிகள். ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டுள்ளார். ரூ.60 கோடியில் புதிய குடிநீர் திட்டம் வர காரணமாக இருந்தவர்.
ஜெயலலிதா அம்மையார், தேர்தல் சீசனில் மட்டும் மக்களை சந்திக்க வருவார். இவர் சீசன் தலைவர். மாறாக நாங்கள், மக்களை நாடி தெருக்களில், சாலைகளில், நீங்கள் இருக்கும் இடத்துக்கே தேடிவந்து உங்களை சந்திக்கிறோம். ஆனால் இந்த அம்மையார் வானத்தில் பறந்து ஹெலிகாப்டரில் பயணித்து சந்திக்கிறார்.
ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை பார்த்து தரையில் படுத்து கும்பிடுகிறார்கள். இங்கே நீங்கள் எனக்கு பாசத்தோடு வணக்கம் சொல்கிறீர்கள். ஆனால், அங்கே என்ன பண்பாடு. பண்பாட்டை மட்டுமல்ல, நாட்டையும் ஜெயலலிதா குட்டி சுவர் ஆக்குகிறார்.
இந்த அம்மையார் வரும் கூட்டங்களில் காலை 10 மணிக்கு ஆட்களை கூட்டிவந்து ஆடு, மாடு போல் அடைத்து வைக்கின்றனர். இயற்கை உபாதைக்காக வெளியே சென்றால் போலீசார் அவர்களை வெளியே விடுவதில்லை. இதனால் மக்கள் எரிச்சலில் அமர்ந்திருக்கிறார்கள். எனவே தான் அவர் கேட்கும் கேள்விக்கு கூட மக்கள் பதில் அளிப்பதில்லை.
லோக்சபா தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மக்கள் நாமம் போடுவார்கள். இந்த தேர்தல் தொடங்கும் சமயத்தில், அதிமுகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று கூறினார்கள். ஆனால், இப்போது திமுக முந்துகிறது, அதிமுக பிந்துகிறது என்ற செய்திகள் வருகின்றன.
என்னிடம் உளவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் களம் சூடு பிடித்துவிட்டது, 40 தொதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். இன்னும் சில நாட்களில், திமுக அணி மாபெரும் வெற்றி பெற்றது என்ற செய்தி வரும். இதற்கு ஜெயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சியே காரணம். இந்த 3 ஆண்டு ஆட்சியில் நீங்கள் எதையும் செய்ய வேண்டாம். எங்கள் திட்டங்களை நிறைவேற்றினாலே போதும்.
மாறாக, எதையும் செய்யாமல் செய்வீர்களா, செய்வீர்களா என கேட்கிறீர்கள். என்ன நியாயம்? மத்தியில் நாம் விரும்பும் மதசார்பற்ற நிலையான, நேர்மையான அரசு அமைய வேண்டும். ஆகவே, தலைவர் கைகாட்டிய பிரதமர் ஆட்சியில் அமர, ஜெகத்ரட்சகனுக்கும், இடைத்தேர்தலில் போட்டியிடும் ஆர்.எஸ்.பாரதிக்கும் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
ஆம்புலன்சுக்கு வழி
பல்லாவரம் ஜி.எஸ்.டி.சாலையில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது, கூட்டத்தின் நடுவே ஒரு ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் தவித்தது. இது பற்றிய தகவல் மு.க.ஸடாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர், ஆம்புலன்சுக்கு வழி விடும் வகையில், பேச்சை முடித்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் ஆம்புலன்ஸ் தொடர்ந்து சென்றது. மு.க.ஸ்டாலினின் இந்த மனித நேயத்தை அங்கிருந்தவர்கள் பாராட்டினார்கள்.