ஜெ. எந்த பாணியில் கேள்வி கேட்டாலும் பதிலுக்கு நாங்களும் அதேபோல் கேட்போம்..: சிவங்கையில் ஸ்டாலின்
சிவகங்கை: செய்வீர்களா? என்றாலும் சரி, உண்மையா? இல்லையா? என்றாலும் சரி, ஜெயலலிதா தனது பிரச்சாரக் கூட்டத்தில் கேள்விகளை எப்படிக் கேட்டாலும், அதற்கு பதில் சொல்ல நான் தயார் என்று திமுக பொருளாளார் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். மாலையில் சிவங்கையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கூறியதாவது:
பேச்சை மாற்றியது ஏன்
பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா பேசும் போது மக்களைப் பார்த்து செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? என்றக் கேள்வியைக் கேட்டு வருகிறார். தமிழக மக்களுக்கு நீங்கள் நன்மை செய்தீர்களா என்ற கேள்வியை நான் கேட்டவுடன் தற்போது தனது பேச்சை ஜெயலலிதா மாற்றி உண்மையா? இல்லையா? எனக் கேட்டு வருகிறார்.
உண்மையா? இல்லையா?
முதல்வரின் பாணியில் நானும் இப்போது கேட்கிறேன்.சட்டமன்றத் தேர்தலின் போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் புத்தக சுமையை குறைப்பேன் என ஜெயலலிதா கூறினார். ஆனால் சமச்சீர் கல்வி முறையை ரத்து செய்தார். இது உண்மையா, இல்லையா.
குடும்ப அட்டைதார்களுக்கு விலையில்லா அரிசியை வழங்குவேன் என்றார். தற்போது விலை போகாதா அரிசியை வழங்குகிறார். இது உண்மையா, இல்லையா.
முதியோர்களுக்கு ஓய்வூதியம்
58 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவச பேருந்து அட்டை வழங்குவேன் என்றார். ஆனால் வழங்கவில்லை, இது உண்மையா, இல்லையா.
கடந்த 6 மாதங்களாக முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இது உண்மையா இல்லையா, 1991 மற்றும் 2001ம் ஆண்டுகளில் ஜெயலலிதா சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என்றார். தற்போது வேண்டாம் எனக் கூறுகிறார். சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என சொன்னது உண்மையா, இல்லையா.
கரசேவை ஆதரவு
ராமர் கோவிலுக்காக கரசேவையை ஜெயலலிதா ஆதரித்தார் என்பது உண்மையா, இல்லையா, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்திற்கு குடிநீர் தேவைக்காக ரூ.636 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றியது திமுக. ஆனால் ஜெயலலிதா தான் இத்திட்டத்தைக் கொண்டுவந்ததாகக் கூறுகிறார். திட்டத்தைக் கொண்டு வந்தது திமுக தான் என்பது உண்மையா, இல்லையா.
இலவச கேபிள் டிவி
இலவச கேபிள் டிவி இணைப்பு தருவேன் எனக் கூறிவிட்டு தற்போது ரூ.120 அதிமுக அரசு வசூல் செய்வது உண்மையா, இல்லையா.
பாஜகவுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டதன் காரணமாக தொகுதி பிரிப்பதில் பிரச்சனை என்பதால் கம்யூனிஸ்டுகளை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டது அதிமுக என்பது உண்மையா இல்லையா?.
எப்படி கேட்டாலும் பதில்
வாஜ்பாய் அரசு காரணமாக இருந்தது அதிமுக என்பது உண்மையா, இல்லையா என்று கேட்டார்.
முதல்வர் ஜெயலலிதா தனது பிரச்சாரக் கூட்டத்தில் கேள்விகளை எப்படிக் கேட்டாலும், அதற்கு பதில் சொல்ல நான் தயார் என்றும் ஸ்டாலின் கூறினார்.