பேரு கெட்டுப்போச்சே.. அவதூறு வழக்கு தொடரப்போகிறார்களாம் 'ஆபரேசன்' அதிமுக எம்எல்ஏக்கள்
சசிகலா அணியை ஆதரிக்க கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள எம்எல்ஏக்கள், அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்கு தொடரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : சசிகலாவை ஆதரிக்கவும், சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்று வாக்களிக்க கோடி கணக்கில் பணம் பேரம் நடந்ததாக தொலைக்காட்சி ஒன்றில் வெளியான செய்தியை அதிமுக எம்.எல்.ஏ க்கள் மறுத்துள்ளனர். தவறான செய்திகளை கூறிய நபர்கள் மீது வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக பல அணிகளாக பிரிந்துள்ளது. முதல்வராக இருந்த ஓபிஎஸ் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ராஜினாமா செய்தார். சசிகலாவை சட்டசபை தலைவராக தேர்வு செய்தனர். அவர் முதல்வராவதற்கு பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்றன.
இந்த சூழ்நிலையில்தான் சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார் ஓபிஎஸ். அவருக்கு எதிராக சில எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்தனர். அதே நேரத்தில் 122 எம்எல்ஏக்களை சொகுசு பேருந்தில் அழைத்து சென்று கூவத்தூரில் அடைத்து வைத்தனர்.
ஆபரேசனில் சிக்கிய அதிமுக எம்எல்ஏ
எம்எல்ஏக்கள் அணி மாறிவிடாமல் இருக்க ஒவ்வொருவருக்கும் ரூ.6 கோடி ரூபாய் தருவதாக சசிகலா உறுதி அளித்ததாக கூவத்தூரில் இருந்து தப்பி வந்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் கூறியுள்ளார். ஆங்கில சேனல் நடத்திய ஆபரேசன் மூலம் தெரியவந்துள்ளது.
ரூ. 6 கோடி பணம்
ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் சசிகலா அணி 6 கோடி வரை பணம் கொடுக்க முன் வந்தனர் என்றும், அவ்வளவு பணம் ஏற்பாடு செய்ய முடியாத பட்சத்தில் தங்க கட்டிகள் கொடுப்பதாகவும் கூறியுள்ளனர்.
கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள்
காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி மற்றும் எம்எல்ஏ கருணாஸ் ஆகியோர் 10 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றனர் என்றும், மற்ற யாருக்கும் 1 கோடி கூட கிடைக்கவில்லை என்று மதுரை தெற்கு எம்எல்ஏ சரவணன் கூறியுள்ளார்.
பணம், தங்கக் கட்டிகள்
எம்எல்ஏ சரவணன் மூன் டிவி நிர்வாக இயக்குநருடன் கூவத்தூரில் நடந்தது குறித்து பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கூவத்தூர் ரெசார்டில் நடந்தது குறித்து விளக்கமளித்துள்ளார். சூலூர் எம்எல்ஏ கனகராஜ் சசிகலா அணியினர் பணம் மற்றும் தங்கம் தருவதாக கூறினர் என்றும் வீடியோவில் பேசியுள்ளார்.
பண பேர சர்ச்சை
பண பேரம் பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் பொய் குற்றச்சாட்டு என்பது சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களின் கருத்தாகும். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று எந்த வித ஆதாரமும் இல்லாமல் பேசக்கூடாது என்று அதிமுக எம்எல்ஏ வெற்றி வேல் கூறியுள்ளார்.
வழக்கு தொடர முடிவு
இதே போன்று அதிமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ க்கள் கருணாஸ், அன்சாரி ஆகியோரும் பணம் கொடுக்கப்பட்ட செய்தியை மறுத்துள்ளனர். தங்களின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டியவர்கள் மீது வழக்குத் தொடர போவதாக சர்ச்சையில் சிக்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர்.