ராஜினாமா செய்ய இவர்கள் என்ன வாழப்பாடியாரா? அதிமுக எம்எல்ஏக்களை கேலி செய்த அமைச்சர்! முற்றும் மோதல்
சென்னை: எய்ம்ஸ் விவகாரத்தில் ராஜினாமா என எம்எல்ஏக்கள் சொல்வது சும்மாதான் என கூறியுள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்தே தீர வேண்டும் இல்லாவிடில், மதுரையை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்வோம் என்று திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் (அதிமுக) தெரிவித்திருந்தார்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அதிமுகவின் மதுரை மாவட்ட எம்எல்ஏக்கள் 8 பேர் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் என அனைவருமே தங்களது பதவியை ராஜினாமா செய்யத் தயங்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையின் தொலைக்காட்சி சேனலிடம் பேசுகையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பதவியை ராஜினாமா செய்யப்போவதாக எம்எல்ஏக்கள் கூறுவதெல்லாம் சும்மா. அது பெயரளவுதான். எம்எல்ஏக்கள் அவ்வாறு ராஜினாமா செய்ய மாட்டார்கள்.
வாழப்பாடியாரை (வாழப்பாடி ராமமூர்த்தி) தவிர இதுவரை யாரும் தங்கள் கோரிக்கைக்காக பதவியை ராஜினாமா செய்ததில்லை என மறைமுகமாக கிண்டல் செய்யும் வகையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
காவிரி பிரச்சினைக்காக 1992ல் தனது மத்திய அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தவர் காங்கிரஸ் சீனியர் தலைவர்களில் ஒருவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ஒருவரே தங்கள் கட்சி எம்எஎல்ஏக்கள் குறித்து இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.