காஞ்சிபுரம்: நிருபர்கள் மீது அதிமுகவினர் கொடூரத் தாக்குதல்
காஞ்சிபுரம்: அ.தி.மு.க லோக்சபா உறுப்பினர் மைத்ரேயன் தலைமையில் அ.தி.மு.க.வினர், பத்திரிகையாளர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து 18ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 இடங்களில் மு.க.ஸ்டாலின் ஒரே நாளில் பிரசாரம் செய்தார்.
அதுபோல் நாஞ்சில் சம்பத் தலைமையில் அ.தி.மு.க.வும் நேற்று போட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஸ்டாலின் பிரசாரம் செய்த இடங்களில் அ.தி.மு.க.வினரும் பிரசாரம் செய்து வந்தனர். நிறைவுப் பிரசாரம் காஞ்சிபுரம் தேரடி பகுதியில் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒரு பக்கம் மேடையும் அதன் பக்கத்தில் பேருந்துகள் தொடர்ந்து போவது போலவும் வழக்கம் போல மேடை அமைக்கப்பட்டிருந்தது.
நாஞ்சில் சம்பத், மைத்ரேயன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், சோமசுந்தரம், மைதிலி என அ.தி.மு.க முக்கிய புள்ளிகள் அனைவரும் 9.20க்கு மேடை ஏறினார்கள்.
கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது பேருந்து ஒன்று அந்த வழியாக சென்றது. உடனே மைத்ரேயன் காவல்துறைக்கு நான் கட்டளையிடுகிறேன். இந்தப்பக்கம் வண்டி வராமல் நிறுத்துங்க என்றார். ஆனால் தொடர்ந்து பேருந்துகள் இயங்கி கொண்டிருந்தது.
இதனால், கோபம் கொண்ட மைத்ரேயன், மேடையை விட்டு கீழே இறங்கினார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் வந்தனர். சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புகளை குறுக்கே போடச்சொல்லிவிட்டு சாலையில் அமர்ந்தார்.
ஆளுங்கட்சியினர் போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பிவிடுவதை எதிர்க்கட்சி தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் பதிவு செய்ய முற்பட்டார். அந்தத் தொலைக்காட்சி நிருபர் விடியோ படம் எடுத்ததைக் கண்ட அதிமுகவினர் கொதிப்படைந்து, "நேற்று உங்கள் கட்சி பிரசார கூட்டம் நடந்தபோது வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டதை பார்த்துக் கொண்டிருந்த நீங்கள் இப்போது மட்டும் இதை விடியோ படம் எடுப்பது ஏன்? என்று கேட்டு அந்தத் தொலைக்காட்சி நிருபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றியபோது சிலர் அந்த நிருபரைத் தாக்க முற்பட்டனர். அருகிலிருந்த "தினமணி' செய்தியாளர், சக பத்திரிகையாளர் தாக்கப்படுகிறார் என்று கூறி அதைத் தடுக்க முயன்றார். அப்போது அதைப் பொருள்படுத்தாமல் அவரையும் தாக்கினர். தாக்கப்படுவது பத்திரிகையாளர்கள் என்று தெரிந்ததும், அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் அங்கு விரைந்து வந்து அதைத் தடுப்பதற்குள் இருபதுக்கும் மேற்பட்டோர் சமாதானம் செய்ய முற்பட்ட "தினமணி' நிருபரை சூழ்ந்து கொண்டு கடுமையாகத் தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த நிருபர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து கேள்விபட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களும் நிருபர்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இதனிடையே, நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம்
நிருபர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி செய்தி சேகரிக்கச் செல்லும் நிருபர்களுக்கு காவல்துறையும், தேர்தல் அதிகாரிகளும், தமிழக அரசும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.